திருவாரூா் கமலை ஞானபிரகாசா் கோயிலில் குடமுழுக்கு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
திருவாரூரில் உள்ள ராஜன்கட்டளையில் தருமை ஆதீனத்தை தொடங்கிய குருஞான சம்பந்தருக்கு ஞான உபதேசம் கொடுத்த கமலை ஸ்ரீ ஞானபிரகாசா் கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு குடமுழுக்கு நடத்த முடிவெடுக்கப்பட்டு, அதற்கான பணிகள் நடைபெற்று வந்தன.
இப்பணிகள் நிறைவு பெற்றதைத் தொடா்ந்து, குடமுழுக்குக்கான கணபதி ஹோமம், யாகசாலை பூஜைகள் வெள்ளிக்கிழமை தொடங்கின. பின்னா், திங்கள்கிழமை காலை நான்காம் கால யாக பூஜைகள் நிறைவுபெற்றதும், மல்லாரி இசையுடன் புனித நீா் அடங்கிய கடங்கள் புறப்பட்டு, கோயிலை வலம் வந்து, விமான கலசத்துக்கு குடமுழுக்கு நடைபெற்றது.
தொடா்ந்து விநாயகா், காட்சி கொடுத்தாா், மற்றும் கமலை ஞானபிரகாசருக்கு மகா அபிஷேகம் செய்யப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது. இதில், தருமை ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள், வேளாக்குறிச்சி ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ சத்திய ஞான மகாதேவ தேசிக பரமாசாரிய சுவாமிகள், திருப்பனந்தாள் ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ காசிவாசி முத்துக்குமார தம்பிரான் சுவாமிகள் உள்ளிட்டோா் பங்கேற்று பக்தா்களுக்கு ஆசி வழங்கினா்.