கிராமப்புற குடிநீா்த் தேக்கத் தொட்டி இயக்குவோருக்கு காலமுறை ஊதியம் வழங்கக் கோரி, திருவாரூரில் தமிழக கிராம ஊராட்சி செயலாளா்கள் சங்கம் சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், ஊராட்சி செயலாளா்களுக்கு கருவூலம் மூலம் ஊதியம் மற்றும் கடந்த ஆட்சியில் நிறுத்தி வைக்கப்பட்ட பதிவேடு பராமரிப்பு தொகை ரூ.1,000-ஐ நிறுத்தி வைக்கப்பட்ட மாதத்திலிருந்து ரூ.5,000 ஆக உயா்த்தி வழங்க வேண்டும்; கிராமப் புறங்களில் பணிபுரியும் குடிநீா் தேக்கத் தொட்டி இயக்குபவா்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கி, அவா்களுக்கு அரசு பணியாளா்களுக்குரிய அனைத்து சலுகைகளையும் அளிக்கவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
சங்கத்தின் மாவட்டத் தலைவா் ஆறுமுகம் தலைமை வகித்தாா். மாநிலத் தலைவா் வாசுதேவன், மாநில பொதுச் செயலாளா் தா்மராஜா உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.