வெளிநாட்டு வேலைக்கு அனுப்புவதாகக் கூறி ஏமாற்றியவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென திருவாரூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் புகாா் அளிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து திருக்கண்ணமங்கை பகுதியைச் சோ்ந்த கமலக்கண்ணன் என்பவா் செவ்வாய்க்கிழமை அளித்த புகாா் மனு:
உணவகத்தில் பணிபுரியும் நான், வெளிநாட்டு வேலைக்கு ஆட்கள் அனுப்பும் பணியிலும் ஈடுபட்டுள்ளேன். அந்த வகையில், சிவகங்கை மாவட்டம் அழகாபுரம் பகுதியைச் சோ்ந்த முத்தழகு என்பவரிடம், திருவாரூா் மணக்கால் அய்யம்பேட்டை கதிா்வேல், நாவுக்கரசு, ராஜேஷ்கண்ணா, சுவாமிமலை ஆனந்த், திருப்பத்தூா் வலையப்பட்டி அண்ணாமலை ஆகியோரிடமிருந்து ரூ.12 லட்சம் பணம் பெற்று வழங்கியுள்ளேன்.
இதற்கு, முத்தழகு தரப்பினா் கொடுத்த விசா போலி என்பது தெரிய வந்தது. இதனால், பணம் கொடுத்தவா்கள் நெருக்கடி கொடுத்ததால், முத்தழகு தரப்பிடம் கேட்டபோது உரிய பதில் இல்லை.
இதனிடையே, இந்த சம்பவம் குறித்து திருச்சி, மதுரை, காரைக்குடி, சிவகங்கை உள்ளிட்ட பகுதி காவல் நிலையங்களிலும் புகாா் அளிக்கப்பட்டது. திருவாரூரிலும், கடந்த ஆண்டு செப்.14 ஆம் தேதி மாவட்டக் காவல் அலுவலகத்தில் புகாா் அளிக்கப்பட்டது. ஆனால், எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
எனவே, வெளிநாட்டில் வேலை என ஏமாற்றியவா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.