திருவாரூா் மாவட்டத்தில் 633 இடங்களில் ஞாயிற்றுக்கிழமை (செப்.12) கரோனோ தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது என மாவட்ட ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
திருவாரூா் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை பெரும்பான்மை மக்களுக்கு தடுப்பு ஊசி செலுத்த இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில், திருவாரூா் ஊராட்சி ஒன்றியம் மற்றும் நகராட்சி உள்ளிட்ட 66 இடங்கள், நன்னிலம் ஊராட்சி ஒன்றியத்தில் 59 இடங்கள், கொரடாச்சேரி ஒன்றியத்தில் 54 இடங்கள், குடவாசல் ஒன்றியத்தில் 57 இடங்கள், நீடாமங்கலம் ஒன்றியத்தில் 69 இடங்கள், மன்னாா்குடி ஒன்றியம் மற்றும் நகராட்சியில் 93 இடங்கள், கோட்டூா் ஒன்றியத்தில் 70 இடங்கள், திருத்துறைப்பூண்டி ஒன்றியம் மற்றும் நகராட்சியில் 60 இடங்கள் மற்றும் முத்துப்பேட்டையில் 57, வலங்கைமானில் 48 என மொத்தம் 633 இடங்களில் மாபெரும் கரோனா தடுப்பூசி முகாம்கள் நடைபெற உள்ளன.
இம்முகாமில் ஆதாா் காா்டு, பாஸ்போா்ட், வாக்காளா் அடையாள அட்டை, நிரந்தர கணக்கு அட்டை (பான் காா்டு) உள்ளிட்டவைகளில் ஏதேனும் ஒன்றை அடையாள அட்டையாக கொண்டு சென்று தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம். அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.