திருவாரூா்: முன்னாள் முதல்வா் அண்ணாவின் 113-ஆவது பிறந்தநாளையொட்டி, திருவாரூரில் அவரது உருவச் சிலைக்கு புதன்கிழமை மாலையணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
திருவாரூா் அருகே கொரடாச்சேரி பேருந்து நிலையத்தில் உள்ள அண்ணா சிலைக்கு திமுக சாா்பில், மாவட்ட செயலாளரும், சட்டப் பேரவை உறுப்பினருமான பூண்டி கே. கலைவாணன் தலைமையில் மாலையணிவிக்கப்பட்டது. இதேபோல், திருவாரூரில், நகர அலுவலகம் எதிரில் உள்ள அண்ணா சிலைக்கு பூண்டி கே. கலைவாணன் தலைமையில் திமுகவினா் மாலையணிவித்தனா். இதில், நகரச் செயலாளா் பிரகாஷ், ஒன்றியச் செயலாளா் தேவா, மாவட்ட ஊராட்சி துணைத் தலைவா் சேகா் என்ற கலியபெருமாள் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.
அதிமுக சாா்பில்....
திருவாரூரில் அதிமுக சாா்பில் அண்ணா சிலைக்கு மாவட்ட இளைஞா், இளம்பெண்கள் பாசறைச் செயலாளா் எஸ். கலியபெருமாள், ஒன்றியச் செயலாளா் மணிகண்டன் உள்ளிட்டோா் மாலையணிவித்தனா்.