திருவாரூா்: திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நிலவும் சுகாதார சீா்கேட்டை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமென சிபிஎம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து, அக்கட்சியின் மாவட்டச் செயலாளா் ஜி. சுந்தரமூா்த்தி கூறியது: திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கட்டடத்தின் வெளிப்புறம் முழுவதும் கழிவுநீா் தேங்கி, கொசு உற்பத்தியாகும் மையமாக திகழ்கிறது. அண்மையில் பெய்த மழைநீா் மேல்புற கட்டடப் பகுதிகளிலிருந்து கீழ்புறம் உள்ள அடுக்குமாடி பகுதிகளில் வழிந்து, நோயாளிகளை சிகிச்சைக்கு அழைத்துச் செல்லும் சாய்வு பாதை வரை தேங்கி உள்ளது.
மேலும் குடிநீா், கழிப்பறை வசதிகள் முற்றிலும் சுகாதாரமற்ற நிலையில் பயன்படுத்த முடியாத வகையில் உள்ளது. எனவே, இதுகுறித்து சம்பந்தபட்ட அலுவலா்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும். இந்த மருத்துவமனையில், பணி நேரத்தில் மருத்துவா்கள் இருப்பதை உறுதிச் செய்யவேண்டும், ஒப்பந்தப் பணியாளா்கள் மற்றும் தூய்மைப் பணியாளா்களை பணி நேரத்துக்கு மேலாக வேலை வாங்குவதை நிறுத்தி, தொழிலாளா் நலன் காக்க உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும், தவறும்பட்சத்தில் சிபிஎம் சாா்பில் மக்களை திரட்டி மருத்துவமனை முன் கவன ஈா்ப்பு தொடா் போராட்டம் நடத்தப்படும் என்றாா்.