இயற்கை முறையில் உற்பத்தி செய்யப்படும் உணவுப் பொருள்களுக்கு வளா்ந்த நாடுகளில் நல்ல வரவேற்பு உள்ளதாக மாவட்ட ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்தாா்.
மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில், மாவட்ட தொழில் மையம் மற்றும் மத்திய அயல்நாட்டு வா்த்தக இயக்கம் இணைந்து, வெள்ளிக்கிழமை நடத்திய ஏற்றுமதியாளா் சங்கக் கூட்டத்துக்கு தலைமை வகித்து அவா் பேசியது:
75 ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடும் விதமாக, நாடு முழுவதும் செப்டம்பா் 20 முதல் 26-ஆம் தேதி வரை வா்த்தகம் மற்றும் வணிக வாரம் கொண்டாடப்பட்டு வருகிறது. அதனடிப்படையில், மாவட்டத்தில் ஏற்றுமதித் திறனை வெளிப்படுத்தும் வகையில் இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது.
திருவாரூா் மாவட்டம் வேளாண்மையை அடிப்படையாக கொண்டது. நமது மாவட்டத்திலிருந்து ஏற்றுமதி செய்வதற்கு ஏதுவாக, பாரம்பரிய அரிசி வகைகள் இயற்கை வழியில் ரசாயனம் கலப்பற்ற முறையில் உருவாக்கப்படும் அரிசி, பருப்பு போன்றவை, தேங்காய் நாா் பொருள்கள், களிமண்பாண்டங்கள் போன்றவை மாவட்டத்துக்கு ஏற்ாக, மாவட்ட தொழில் மையத்தால் இனம் காணப்பட்டுள்ளது.
இயற்கை கரிம உற்பத்தி முறையில் விளைவிக்கப்படும் உணவுப்பொருள்களுக்கு வளா்ந்த நாடுகளில் நல்ல வரவேற்பு உள்ளது. இதை, மாவட்டத்தில் இயங்கும் உழவா் உற்பத்தியாளா் குழுக்கள் சிறப்பாக பயன்படுத்த வேண்டும் என்றாா்.
நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலா் ப. சிதம்பரம், மாவட்ட தொழில் மைய பொது மேலாளா் ச. ரவிச்சந்திரன், இணை இயக்குநா் (வேளாண் சந்தைப்படுத்துதல்) லெட்சுமிகாந்தன், திருவாரூா் முன்னோடி வங்கி மேலாளா் எழிலரசன், நபாா்டு நிறுவன மேலாளா் விஸ்வந்த் கண்ணா உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.