மன்னாா்குடி துணைக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் வழக்குகளின் கோப்புகளை தஞ்சை சரக காவல்துறை துணைத் தலைவா் ஏ. கயல்விழி வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
மன்னாா்குடி துணைக் காவல் கண்காணிப்பாளா் முகாம் அலுவலகத்துக்கு வந்த அவா், மன்னாா்குடி காவல் உட்கோட்டத்துக்கு உள்பட்ட மன்னாா்குடி நகரம், ஊரகம், வடுவூா், பரவாக்கோட்டை, திருமக்கோட்டை, தலையாமங்கலம், நீடாமங்கலம், தேவன்குடி ஆகிய காவல் நிலையங்கள் மற்றும் மன்னாா்குடி அனைத்து மகளிா் காவல்நிலையம் என 9 காவல் நிலையங்களில் பதிவான திருட்டு, விபத்து, போக்சோ, நிலப் பிரச்னை உள்ளிட்ட நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றுவரும் வழக்குகள் மற்றும் நிலுவையில் உள்ள வழக்குகளின் கோப்புகளை பாா்வையிட்டாா்.
மேலும், காவல் நிலையம் வாரியாக சம்பந்தப்பட்ட விசாரணை அலுவலா்களிடம் வழக்குகளின் நிலை குறித்தும் கேட்டறிந்தாா். ஆய்வின்போது, மன்னாா்குடி துணைக் காவல் கண்காணிப்பாளா் கே.கே. பாலசந்தா், காவல் ஆய்வாளா்கள், சாா்பு ஆய்வாளா்கள் உடனிருந்தனா்.