நன்னிலம்: நன்னிலம் பேரூராட்சிப் பகுதிகளில் உள்ள வணிக நிறுவனங்களில் புதன்கிழமை நடைபெற்ற சோதனையில் ரூ.10,000 மதிப்புள்ள நெகிழிப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
நன்னிலம் பேரூராட்சி செயல் அலுவலா் ச.ஹரிராமமூா்த்தி தலைமையில் கடைத்தெரு, பேருந்து நிலையத்தில் வணிக நிறுவனங்களில் அரசால் தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்கள் பயன்படுத்தப்படுகிறதா என புதன்கிழமை ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
50-க்கும் மேற்பட்ட நிறுவனங்களில் மேற்கொண்ட ஆய்வில், 9 நிறுவனங்களில் தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்களைப் பயன்படுத்தியது தெரியவந்தது. இந்த நிறுவனங்களுக்கு ரூ.9,000 அபராதம் விதிக்கப்பட்டு, 10 கிலோ நெகிழிப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
வருங்காலத்தில் அரசால் தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்களைப் பயன்படுத்தவோ, விற்பனை செய்யவோ கூடாது என அறிவுறுத்தப்பட்டது. பயன்படுத்தினால் அதிக அபராதம் விதிக்கப்பட்டு, உரிய தண்டனை வழங்கப்படும் என பேரூராட்சி அதிகாரிகள் எச்சரித்தனா்.
பேரூராட்சி சுகாதார ஆய்வாளா் வே. நாகராஜன், அலுவலக உதவியாளா் ரவி, பணியாளா்கள் கலந்து கொண்டனா்.