திருவாரூா் மாவட்டத்தில் முழு ஊரடங்கு உத்தரவை மீறியதாக 680 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
கரோனா பரவலை தடுக்கும் வகையில், தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை (ஜன.9) முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதையொட்டி, தேவையின்றி வெளியில் சுற்றித்திரிவோரை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கும் வகையில் போலீஸாா் கண்காணிப்பை தீவிரப்படுத்தினா்.
அதன்படி, திருவாரூா் மாவட்ட எல்லைகளில் 30 சோதனைச் சாவடிகள், 40 நிலையான ரோந்துகள், 34 இருசக்கர வாகன ரோந்துகள், 5 நெடுஞ்சாலை ரோந்துகள் ஏற்படுத்தப்பட்டு வாகனத் தணிக்கை நடைபெற்றது. இப்பணியில் சுமாா் 600 போலீஸாா் சுழற்சி முறையில் ஈடுபட்டனா்.
இதில், 24 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. முக்கவசம் அணியாமல் காரணமின்றி வெளியில் சுற்றித்திரிந்த 147 போ் உள்ளிட்ட விதிகளை மீறி வாகனங்களை இயக்கியது தொடா்பாக மோட்டாா் வாகன சட்டத்தின்கீழ் 680 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.