கூத்தாநல்லூர்: புனித மெக்காவில் தமிழ் மொழியில் ஒலிபரப்பு, செம்மொழிக்கு கிடைத்தப் பெருமை என்று மனிதநேய ஜனநாயகக் கட்சி பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி தெரிவித்துள்ளார்.
உலகெங்கும் வாழும் இஸ்லாமியர்களின் இரண்டு முக்கிய பண்டிகைகளில் ஒன்று பக்ரீத் பண்டிகை. மற்றொன்று ஹஜ் பெருநாள் என்றும், தியாகத்திருநாள் என்றும் போற்றப்படுகிறது.
வசதி மிக்கவர்கள் வாழ்நாளில் ஒரு முறையாவது புனித மெக்காவுக்கு ஹஜ் யாத்திரைக்குச் செல்வது என்பது இஸ்லாமியர்களின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றாகும். இது குறித்து, மனிதநேய ஜனநாயகக் கட்சி பொதுச் செயலாளரும், சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினருமான மு.தமிமுன் அன்சாரி கூறியதாவது:
நிறம், இனம், மொழி, நாடு என பேதங்களைக் கடந்து ஆண்டுக்கு ஒரு முறை பக்ரீத் பண்டிகையையொட்டி புனித மெக்காவில், 10 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் புனித பயணிகளாக கூடுகிறார்கள். அவர்கள் ஹாஜிகள் என அழைக்கப்படுகிறார்கள்.
இதையும் படிக்க: சதுரகிரி கோயிலுக்குச் செல்ல ஜூலை 11 முதல் 14 வரை அனுமதி
இந்நிகழ்வை முன்னிட்டு, மெக்காவில் அரபா என்ற மலைப் பகுதியில் புனிதப் பயணிகள் பிரார்த்தனையில் ஈடுபடுவார்கள். அங்கு மெக்காவின் தலைமை மதகுருவான இமாம், சொற்பொழிவாற்றுகள். மெய்சிலிர்க்கும்படியான அவரது உரை உலகெங்கும் ஒலி - ஒளி செய்யப்படுகிறது. மெக்காவிற்கு செல்ல முடியாதவர்களுக்கு அது பெரும் மகிழ்ச்சியைத் தரும்.
இந்தாண்டு முதல் முறையாக, இமாமின் உரை தமிழிலும் உடனுக்குடன் மொழிபெயர்த்து நேரலையாக ஒலிப்பரப்பானது. நேற்று அரபா மலையக திடலில் நடந்த பிரார்த்தனையை தமிழகம், இலங்கை, தென்கிழக்காசியா, வளைகுடா உள்ளிட்ட பரந்து வாழும் தமிழ் பேசும் இஸ்லாமிய மக்கள் தமிழில் கேட்டு மகிழ்கின்றனர்.
பல நாடுகளில் பரவி வாழும் தமிழ் பேசும் இஸ்லாமியர்களுக்கு பேரின்பத்தைக் கொடுத்துள்ளன. செம்மொழியான தமிழுக்கு செளதியில் கிடைத்திருக்கும் மரியாதை தமிழ் ஆர்வலர்களால் பாராட்டப்பட்டிருக்கிறது என்றார்.