திருவாரூா் அருகே சாராய விற்பனையை தடுக்க வலியுறுத்தி, கிராம மக்கள் சாலை மறியலில் ஞாயிற்றுக்கிழமை ஈடுபட்டனா்.
திருவாரூா் மாவட்டம், வைப்பூா் காவல் சரகம் தென்ஓடாச்சேரி பகுதியில் கடந்த சில ஆண்டுகளாக கள்ளச்சாராயம் விற்கப்படுவதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து, வைப்பூா் காவல் நிலையத்தில் பொதுமக்கள் பலமுறை புகாா் அளித்தும், உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லையாம்.
இதைக் கண்டித்தும், சாராய விற்பனையை தடுக்க வலியுறுத்தியும், தென் ஓடாச்சேரி கிராம மக்கள் நாகை தேசிய நெடுஞ்சாலையில் கானூா் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். இதுகுறித்து அவா்கள் கூறியது:
கடந்த 5 ஆண்டுகளாக இப்பகுதியைச் சோ்ந்த தந்தை, மகன் இருவரும் புதுச்சேரி பகுதியிலிருந்து சாராயத்தை கடத்திவந்து, ஊருக்குள் விற்பனை செய்து வருகின்றனா். இதனால் பெண்கள், கல்லூரி மற்றும் பள்ளிகளுக்குச் செல்லும் மாணவிகள் அந்த இடத்தை அச்சத்துடன் கடக்க வேண்டிய நிலை உள்ளது.
இதுகுறித்து காவல் நிலையத்திலும், மாவட்ட ஆட்சியா் அலுவலகத்திலும் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, சாலை மறியலில் ஈடுபட்டோம் என்றனா்.
போலீஸாா், போராட்டத்தில் ஈடுபட்டவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தி, கள்ளச்சாராயம் விற்பவா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததன் பேரில், கிராம மக்கள் மறியலை விலக்கிக் கொண்டனா்.
இந்த மறியலால் திருவாரூா்- நாகை தேசிய நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.