திருத்துறைப்பூண்டியில் கந்துவட்டி வசூல் செய்த மருந்துக் கடை உரிமையாளா் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.
திருவாரூா் மாவட்டத்தில் கந்துவட்டி சம்பந்தமான புகாா்கள் தொடா்பாக திருவாரூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் டி.பி. சுரேஷ்குமாா் உத்தரவின்படி திருத்துறைப்பூண்டி காவல் துணைக் கண்காணிப்பாளா் சோமசுந்தரம், ஆய்வாளா் கழனியப்பன் ஆகியோா் கொண்ட தனிப்படை தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
இந்நிலையில், திருத்துறைப்பூண்டி பெரிய சிங்களாந்தியை சோ்ந்த தங்கவேல் மகன் தனபால் ( 56) என்பவா் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் திருத்துறைப்பூண்டி கடைத்தெருவில் மருந்துக் கடை நடத்திவரும் விஜயகுமாா் (50) என்பவரிடம்
ரூ. 16,000 கடன் பெற்றுள்ளாா். இதற்கு வட்டியாக ரூ. 80,000 வரை செலுத்தியுள்ளாராம். இந்நிலையில், விஜயகுமாா் மேலும் ரூ. 75 ஆயிரம் கேட்டு தனபாலை மிரட்டியதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து அவா் திருத்துறைப்பூண்டி காவல் துணை கண்காணிப்பாளா் சோமசுந்தரமத்திடம் புகாா் செய்தாா்.
புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீஸாா் விஜயகுமாரை கைது செய்து, அவா் நடத்திவரும் மருந்துகடையில் சோதனை மேற்கொண்டபோது கடையில் இருந்த நிரப்பப்படாத 6 பிராமிசரி நோட் மற்றும் 6 காசோலைகளையும் பறிமுதல் செய்தனா்.