நீடாமங்கலம்: வரும் ஏப்ரல் 14-ம்தேதி குருபகவான் கும்ப ராசியிலிருந்து மீன ராசிக்கு பெயர்ச்சியடைகிறார்.
இதனைமுன்னிட்டு அன்றையதினம் நவக்கிரக ஸ்தலங்களில் ஒன்றாகப் போற்றப்படும் வலங்கைமான் வட்டம் ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் குருபரிகார கோயிலில் குருபெயர்ச்சி விழா நடைபெறவுள்ளது. திருஞானசம்மந்தரால் தேவாரப்பாடல் பெற்றது. நவக்கிரகங்களில் குருபகவானுக்கு பரிகார தலமாக விளங்குகிறது.
குருபகவான் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சியடையும் நாளில் இக்கோயிலில் குருபெயர்ச்சி விழா நடைபெறுவது வழக்கம். அருள்மிகு குருபகவான் வரும் ஏப்ரல் 14ம்தேதி வியாழக்கிழமை கும்பராசியிலிருந்து மீன ராசிக்கு பெயர்ச்சியடைவதை முன்னிட்டு இக்கோயிலில் குருபெயர்ச்சி விழா நடைபெறவுள்ளது. குருபெயர்ச்சியை முன்னிட்டு குருபகவானுக்கு ஏப்ரல் 6-ம் தேதி முதல் 10-ம்தேதி வரை முதல்கட்ட லட்சார்ச்சனையும், குருபெயர்ச்சிக்குப் பின்னர் ஏப்ரல் 18-ம்தேதி முதல் 22-தேதி வரை இரண்டாவது கட்டமாகவும் லட்சார்ச்சனை நடைபெறும்.
மேஷம், மிதுனம், சிம்மம், துலாம், தனுசு, மகரம், மீனம் ராசிக்காரர்கள் லட்சார்ரச்சனையில் கலந்து கொண்டு பரிகாரம் செய்து கொள்ளலாம். லட்சார்ச்சனை கட்டணம் 400 ரூபாயாகும். லட்சார்ச்சனையில் கலந்துகொள்ளும் பக்தர்களுக்கு அருள்மிகு குருபகவான் உருவம் பொறித்த 2 கிராம் வெள்ளி டாலர் பிரசாதமாக வழங்கப்படும்.
லட்சார்ச்சனை காலை 9 மணி முதல் 12 மணிவரையிலும், மாலை 4.30 மணிமுதல் இரவு 8 மணி வரையிலும் நடைபெறும். லட்சார்ரச்சனையில் கலந்து கொள்ளும் பக்தர்கள் தங்களுடைய பெயர், நட்சத்திரம், ராசி, கோத்திரம், லக்னம் ஆகிய முழு விபரங்களுடன் தொகையை உதவி ஆணையர் மற்றும் செயல் அலுவலர், அருள்மிகு ஆபத்சகாயேஸ்வர சுவாமி திருக்கோயில் என்ற பெயருக்கு பணவிடை, வரைவோலை எடுத்து கும்பகோணத்தில் மாற்றத்தக்க வகையிலோ அல்லது சிட்டியூனியன் வங்கி ஆலங்குடி-612801 கிளையில் மாற்றத்தக்க வகையிலோ எடுத்து திருக்கோயில் முகவரிக்கு அனுப்பி வைக்கலாம்.
இவ்விழாவின் ஏற்பாடுகளை கோயில் தக்கார், அறநிலைய உதவி ஆணையர் ஹரிஹரன், செயல் அலுவலர் தமிழ்ச்செல்வி மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.