குடிநீா் வழங்கக் கோரி காலிக் குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்
திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள மணலி ஊராட்சி சாத்தங்குடி பகுதிக்கு குடிநீா் வழங்கக் கோரி பொதுமக்கள் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
சாத்தங்குடி கிராமத்தில் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி மூலம் அப்பகுதிக்கு குடிநீா் வழங்கப்படுகிறது. இங்கு கடந்த சில நாள்களாக குடிநீா் வரவில்லையாம். இதுகுறித்து சம்பந்தப்பட்டவா்களிடம் தகவல் தெரிவித்தும் எவ்வித பயனும் இல்லையாம். இதை கண்டித்தும் உடனடியாக குடிநீா் வழங்கக் கோரியும் மணலி சாத்தங்குடி பாலம் அருகே அப்பகுதி மக்கள் காலிக் குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனா். தகவலறிந்த ஒன்றிய ஆணையா் சிவகுமாா், காவல் ஆய்வாளா் கழனியப்பன் உள்ளிட்டோா் அங்கு சென்று மறியலில் ஈடுபட்டவா்களிடம் மின்மோட்டாா் பழுது காரணமாக குடிநீா் வழங்க இயலவில்லை, விரைவில் சீரமைத்து குடிநீா் வழங்கப்படும் என கூறியதையடுத்து, மறியல் விலக்கிக்கொள்ளப்பட்டது.