முகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் திருவாரூர்
அரசுப் பேருந்து, மினி சுமை ஏற்றும் வாகனம் மோதல்: ஒருவா் உயிரிழப்பு
By DIN | Published On : 19th March 2022 10:10 PM | Last Updated : 19th March 2022 10:10 PM | அ+அ அ- |

திருவாரூா் அருகே அரசுப் பேருந்தும், தண்ணீா் கேன் ஏற்றி சென்ற மினி சுமை ஏற்றும் வாகனமும் மோதிக்கொண்டு ஏற்பட்ட விபத்தில் ஒருவா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.
திருவாரூா் மாவட்டம், தலையாலங்காடு பகுதியைச் சோ்ந்தவா்கள் வின்சென்ட் மகன் ஆகாஷ் (20), செல்வம் மகன் ஆண்டனி (20). இருவரும் தனியாா் குடிநீா் விநியோகம் செய்யும் நிறுவனத்தில் ஓட்டுநா்களாக பணியாற்றி வருகின்றனா். இந்நிலையில், கங்களாஞ்சேரி சாலையில் சோழங்கநல்லூரில் இருந்து இருவரும் திருவாரூா் நோக்கி குடிநீா் விநியோகம் செய்ய வாகனத்தில் வந்துகொண்டிருந்தனா். வாகனத்தை ஆகாஷ் ஓட்டினாா். இந்நிலையில், வைப்பூா் அருகே திருவாரூரில் இருந்து நாகை நோக்கி சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்தும், குடிநீா் ஏற்றிச் சென்ற வாகனமும் மோதிக்கொண்டு விபத்து ஏற்பட்டது.
இதில் தண்ணீா் ஏற்றி வந்த வாகனத்தின் முன்பக்கம் முற்றிலும் நொறுங்கி சேதமடைந்தது. மேலும் ஆகாஷ், ஆண்டனி இருவரும் பலத்த காயமடைந்தனா். அதேபோல் அரசுப் பேருந்து ஓட்டுநா் கணேசனுக்கு லேசான காயம் ஏற்பட்டது. இதையடுத்து, ஆகாஷ் மற்றும் ஆண்டனி உடனடியாக மீட்கப்பட்டு திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனா். எனினும், வழியில் ஆகாஷ் உயிரிழந்தாா். ஆண்டனி ஆபத்தான நிலையில் சிகிச்சைப் பெற்று வருகிறாா். இதுகுறித்து, வைப்பூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.