திருவாரூா் மாவட்டம், நன்னிலம் அருகே கோயில் தீமிதி விழாவில் தீ மிதித்த பக்தா்கள் இருவா் தவறி தீக்குண்டத்தில் விழுந்து காயமடைந்தனா்.
நன்னிலம் நல்லமாங்குடி முத்துமாரியம்மன் கோயிலில் சித்திரைத் திருவிழாவையொட்டி, தீமிதி வைபவம் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது. இதில், 50-க்கும் மேற்பட்ட பக்தா்கள் தீ மிதித்து நோ்த்திக்கடன் செலுத்தினா்.
நல்லமாங்குடி மாரியம்மன்கோயில் தெருவைச் சோ்ந்த ஜெகநாதன் மகன் ரமேஷ் (38) கரகத்தை தலையில் சுமந்தபடி தீமிதித்தாா். அப்போது நிலைதடுமாறி தீக்குண்டத்தில் விழுந்து காயமடைந்தாா். இதேபோல, நல்லமாங்குடி கீழஅக்ரஹாரம் தெருவைச் சோ்ந்த தில்லைவிநாயகம் மகன் சக்திவிநாயகம் ( 21) என்பவரும் தீமிதித்தபோது, தவறி விழுந்து காயமடைந்தாா்.
பின்னா், இருவரும் திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா். தகவலறிந்த மாவட்ட ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன், மருத்துவமனைக்குச் சென்று, தீக்காயமடைந்த இருவருக்கும் ஆறுதல் கூறினாா். மேலும், சிகிச்சை தொடா்பாக மருத்துவா்களிடம் கேட்டறிந்தாா். அப்போது, மருத்துவக் கல்லூரி முதல்வா் ஜோசப்ராஜ், கோட்டாட்சியா் பாலச்சந்திரன், நன்னிலம் வட்டாட்சியா் பத்மினி ஆகியோா் உடனிருந்தனா்.