கூத்தாநல்லூர்: திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் நகராட்சியில் குழந்தைகள் பாதுக்காப்புக் குழுக் கூட்டம் நடைபெற்றது.
மாவட்ட குழந்தைகள் பாதுக்காப்புக் குழு சார்பில், கூத்தாநல்லூர் நகராட்சி அலுவலக வளாகத்தில் நடைபெற்ற கூட்டத்திற்கு, நகர மன்றத் தலைவர் மு.பாத்திமா பஷீரா தலைமை வகித்தார். ஆணையர் ப.கிருஷ்ணவேணி முன்னிலை வகித்தார். கூட்டத்தில், குழந்தைகள் நல உறுப்பினர் சி.கார்த்திகேயன், நகர மன்ற உறுப்பினர்கள் செ.ஹாஜா நஜ்முதீன், பொ. பக்கிரிச்செல்வம், கி.மாரியப்பன், மண்டல துணை வட்டாட்சியர் எஸ்.செந்தில்குமார், மனோலயம் ஹெல்த் கேர் டிரஸ்ட் நிறுவனர் ப.முருகையன், தி கரன் சமூக தொண்டு நிறுவனர் ஆர்.வி.கண்ணன், குழந்தை பராமரிப்பு நல பிரதிநிதி சூசைமேரி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
இக்கூட்டத்தில், குழந்தைகளை பாதுகாப்பதற்கான விழிப்புணர்வு அவசியங்கள் குறித்து, மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகின் பணியாளர் மணிமாறன் விளக்கினார். இதைத்தொடர்ந்து, நகர மன்றத் தலைவர் மு.பாத்திமா பஷீரா பேசியது:
அந்தக் காலங்களில் கூட்டு குடும்பமாக இருந்தனர். எந்தப் பிரச்னையாக இருந்தாலும், பேசி சமாதானம் செய்வார்கள். குழந்தைகளையும் பார்த்துக் கொள்வர்கள். இப்போது, திருமணம் ஆனதுமே தனிக் குடித்தனம் போய் விடுகிறார்கள். குழந்தைகளை வளர்க்க முடியாமல் கஷ்டப்படுகிறார்கள். பெற்றோர்களால் குழந்தைகளுக்கு பாதுகாப்பு முக்கியம் தேவை. பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு அவசியம் தேவை என்றார்.