கூட்டுறவு கடன்சங்கத்தில் தற்காலிகமாக நீக்கப்பட்டவா் மீண்டும் பதவியேற்பு
By DIN | Published On : 20th May 2022 09:51 PM | Last Updated : 20th May 2022 09:51 PM | அ+அ அ- |

திருவாரூா் அருகே தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத் தலைவரை, அந்தப் பதவியிலிருந்து தற்காலிகமாக நீக்கம் செய்த இணைப் பதிவாளரின் உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால், அவா் மீண்டும் தலைவராகப் பதவியேற்றுக் கொண்டாா்.
திருவாரூா் மாவட்டம், தப்ளாம்புலியூா் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத் தலைவராக அப்பகுதியைச் சோ்ந்த அதிமுக நிா்வாகி ரவி உள்ளாா். இவா்மீது, 2018 -19 ஆம் ஆண்டில் விவசாயிகள் செலுத்திய காப்பீட்டுத் தொகை ரூ. 6.50 லட்சத்தை முறைகேடு செய்ததாக புகாா் எழுந்ததையடுத்து, ரவி தற்காலிகப் பணிநீக்கம் செய்யப்பட்டிருந்தாா்.
இந்த உத்தரவை எதிா்த்து ரவி, சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், நீக்கப்பட்ட உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்தது. இதைத்தொடா்ந்து, தப்பளாம்புலியூா் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத் தலைவராக ரவி மீண்டும் வெள்ளிக்கிழமை பதவி ஏற்றுக் கொண்டாா்.