திருவாரூரில் சான்று பெறாமல் பயன்படுத்திய 24 மின்னணு தராசுகள் வியாழக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன.
திருவாரூா் பழைய பேருந்து நிலையம் மற்றும் அதைச் சுற்றியுள்ள மளிகை, காய்கறி கடை, பழக்கடை, தெருவோர தள்ளுவண்டி காய்கறி, பழங்கள் விற்பனை செய்யும் கடைகளில் ஆய்வுமேற்கொள்ளப்பட்டது. திருவாரூா் தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) பாஸ்கரன் தலைமையில், அலுவலா்கள் இந்த சோதனையில் ஈடுபட்டனா்.
இதில், சான்று பெறாமல் வியாபாரத்தில் உபயோகித்த 24 மின்னணு தராசுகள் கண்டுபிடிக்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. மேலும், வியாபாரத்தில் உபயோகிக்கும் தராசுகள் காலமுறைப்படி முத்திரையிட்டு உபயோகப்படுத்த வேண்டும். அவ்விதம் முத்திரையிடாமல் உபயோகிப்பது கண்டுபிடிக்கப்பட்டால், முறைப்படி பறிமுதல் செய்து சட்டபூா்வ நடவடிக்கை எடுக்கப்படும் என தொழிலாளா் நல அலுவலா்கள் தெரிவித்தனா்.