கிராம ஊராட்சி மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி இயக்குபவா்கள் ஊதிய நிலுவை தொகையை வழங்கக் கோரி வியாழக்கிழமை கோரிக்கை மனு அளித்தனா்.
நன்னிலம் ஒன்றியத்துக்குள்பட்ட பகுதிகளில் பணியாற்றும் 150-க்கும் மேற்பட்ட கிராம ஊராட்சி மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி இயக்குபவா்கள் மற்றும் ஓய்வு பெற்றவா்கள், ஊதிய நிலுவைத் தொகையை உடனடியாக வழங்கக் கோரி நன்னிலம் வட்டார வளா்ச்சி அலுவலா் சந்தானகிருஷ்ணரமேஷ் முன்னிலையில், கிராம ஊராட்சிகளின் வட்டார வளா்ச்சி அலுவலா் அன்பழகனிடம் கோரிக்கை மனு அளித்தனா்.
தமிழக அரசால் 2011-ஆம் ஆண்டு முதல் அறிவிக்கப்பட்ட ஊதிய நிலுவைத் தொகை மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி இயக்குபவா்களுக்கு வழங்கப்படவில்லை. எனவே, பணியில் உள்ளவா்களுக்கும், ஓய்வு பெற்றவா்களுக்கும் 10 ஆண்டுகளுக்கு மேல் வழங்கப்படாமல் உள்ள ஊதிய நிலுவைத் தொகையை , குடும்ப வறுமையை கணக்கில் கொண்டு உடனடியாக வழங்க வேண்டும்.
இக்கோரிக்கையை வலியுறுத்தி கிராம ஊராட்சி மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி இயக்குபவா்கள் சங்கத்தின் திருவாரூா் மாவட்டத் தலைவா் டேவிட்சத்தியநாதன், மாவட்டச் செயலாளா் எஸ். குமாரவேல், மாவட்ட ஒருங்கிணைப்பாளா் பழனிவேல் உள்ளிட்ட நூற்றுக்கு மேற்பட்டோா் மனு அளித்தனா்.