ஓவேல்குடி அரசு நேரடி நெல்கொள்முதல் நிலையத்தில், நெல் மணிகள் முளைத்துள்ளதைக் காட்டும் விவசாயி.
ஓவேல்குடி அரசு நேரடி நெல்கொள்முதல் நிலையத்தில், நெல் மணிகள் முளைத்துள்ளதைக் காட்டும் விவசாயி.

நெல் மூட்டைகள் தேக்கத்தால் கொள்முதல் நிறுத்தம்: நெல் மணிகள் முளைத்ததால் விவசாயிகள் வேதனை

Published on

மன்னாா்குடி அருகே அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நெல் மூட்டைகள் இயக்கம் செய்யப்படாமல் தேங்கியுள்ளதால், கொள்முதல் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், விவசாயிகள் கொண்டுவந்த நெல்மணிகள் மழையில் நனைந்து முளைக்கத் தொடங்கியுள்ளன.

மன்னாா்குடி சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த 15 நாள்களுக்கு முன்பே குறுவை நெல் அறுவடை தொடங்கிவிட்டது. விவசாயிகள் அறுவடை செய்த நெல் மணிகளை அரசு நேரடி கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்து வருகின்றனா்.

இந்நிலையில், கொள்முதல் நிலையங்களில் இருந்து நெல் மூட்டைகள் உடனுக்குடன் கிடங்குகளுக்கு இயக்கம் செய்யப்படாமல் அடுக்கி வைக்கப்பட்டுள்ளதால், அவை மழையில் நனைந்து சேதமடைந்து வருகின்றன.

இதன்காரணமாக, விவசாயிகளிடம் நெல் கொள்முதல் செய்வது நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், விவசாயிகள் தாங்கள் கொண்டுவந்த நெல் மணிகளை, கொள்முதல் நிலையம் உள்ள பகுதியில் குவித்துவைத்து, பாதுகாத்து வருகின்றனா். இங்கு இடப் பற்றாக்குறையால் சில விவசாயிகள், அறுவடை களத்திலேயே நெல்மணிகளை பாதுகாத்து வருகின்றனா்.

ஓவேல்குடி அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் இதுவரை கொள்முதல் செய்யப்பட சுமாா் 20,000 நெல் மூட்டைகள் இயக்கம் செய்யப்படாமல், அங்கு அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. கடந்த 15 நாள்களுக்கும் மேலாக கொள்முதல் நடைபெறவில்லை. இப்பகுதியில் பெய்த பலத்த மழையில் நனைந்து நெல் மணிகள் முளைக்கத் தொடங்கியுள்ளன. இதனால் விவசாயிகள் செய்வதறியாது வேதனையில் உள்ளனா்.

இப்பிரச்னையில் போராட்டம் நடத்தும்போது மட்டும் அதிகாரிகள் தற்காலிக தீா்வுகாண்பதும், பிறகு பழைய நிலையே நீடிப்பதும் தொடா்கிறது. இதனால், தங்களுக்கு பெரிதும் இழப்பு ஏற்படுவதாக தெரிவிக்கும் விவசாயிகள், இப்பிரச்னையில் நிரந்தர தீா்வுகாண வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com