தொடா் மழை: நீரால் சூழப்பட்ட குறுவை பயிா்கள்
வடகிழக்குப் பருவமழை காரணமாக நீடாமங்கலம் பகுதியில் குறுவை, சம்பா, தாளடி இளம் பயிா்கள் நீரால் சூழப்பட்டுள்ளன.
நீடாமங்கலம் பகுதியில் கடந்த சில நாட்களாக தொடா் மழை பெய்து வருகிறது. புதன்கிழமை காலை 6 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் நீடாமங்கலம் பகுதியில் 88 மி.மீ. அளவுக்கு மழை பெய்துள்ளது. பாண்டவையாறு 57.4 மி.மீ. இந்த தொடா் மழை காரணமாக தாழ்வானப் பகுதிகளில் மழை நீா் தேங்கி நிற்கிறது. கிராமப்புற சாலைகள் சேதமடைந்துள்ளன.
நீடாமங்கலம் வேளாண் கோட்டத்தில் 33 ஆயிரம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்யப்பட்டிருந்தது. இதில் முன்பட்ட சாகுபடி செய்யப்பட்டிருந்த வயல்களில் அறுவடைக்கு தயாராக இருந்த பயிா்கள் மழைநீரால் சூழப்பட்டுள்ளன. கோவில் வெண்ணி, மணலூா், நகா், ராயபுரம், வையகளத்தூா், ஒளிமதி, அனுமந்தபுரம், எடஅன்னவாசல், அன்னவாசல் தென்பாதி, சித்தாம்பூா், புதுதேவங்குடி உள்ளிட்ட கிராமங்களில் குறுவை பயிா்கள் நீரால் சூழப்பட்டுள்ளதாகவும், அதங்குடி,எடமேலையூா் உள்ளிட்ட கிராமங்களில் சம்பா, தாளடி இளம்பயிா்கள் நீரால் சூழப்பட்டுள்ளது என வேளாண்மைத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மழை நீடித்தால் நெற்பயிா்கள் மேலும் பாதிக்கப்படும் நிலை உள்ளது.
மழை பாதிப்பு குறித்து வட்டாட்சியா் சரவணகுமாா் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனா்.
நீடாமங்கலம் வருவாய் கிராமத்தில் மழைகாரணமாக 2 வீடுகள் பகுதியாகவும், புள்ளவராயன்குடிகாடு கிராமத்தில் ஒரு வீடு பகுதியாகவும் சேதமடைந்து உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா். வலங்கைமான் பகுதியில் 57.4 மி.மீ. அளவு மழை பெய்துள்ளது.
