ஆ.ராசாவின் முன்னாள் கூடுதல் தனிச் செயலர் பாஜகவில் இணைந்தார்
By புது தில்லி, | Published on : 11th April 2014 12:37 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
2ஜி அலைக்கற்றை வழக்கில் சிபிஐ தரப்பு முக்கிய சாட்சியாகக் கருதப்படும் ஆசீர்வாதம் ஆச்சாரி, பாரதிய ஜனதா கட்சியில் வியாழக்கிழமை சேர்ந்தார். இவர் ராசாவின் கூடுதல் தனிச் செயலராக இருந்தவர்.
அலைக்கற்றை வழக்கு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் ஏராளமான பொதுநல வழக்கு தொடர்ந்தவரும் பாஜக மூத்த தலைவருமான சுப்பிரமணியன் சுவாமி, பொதுச் செயலர் ஜே.பி. நட்டா ஆகியோர் முன்னிலையில் ஆசீர்வாதம் அக்கட்சியில் இணைந்தார்.
இதையொட்டி, தில்லியில் உள்ள பாஜக தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்வில் ஆசீர்வாதம் ஆச்சாரிக்கு முறைப்படி உறுப்பினர் அடையாள அட்டை வழங்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து, மக்களவைத் தேர்தலையொட்டி சுப்பிரமணியன் சுவாமி தலைமையிலான பாஜக தேர்தல் உத்திகள் குழுவில் ஆசீர்வாதம் உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.
கட்சியில் சேர்ந்தது தொடர்பாக பின்னர் செய்தியாளர்களிடம் ஆசீர்வாதம் கூறியதாவது:
"2ஜி அலைக்கற்றை வழக்கில் நடைபெற்ற முறைகேடுகளுக்கு எதிராகக் குரல் கொடுத்தது மட்டுமின்றி, சிபிஐயிடமும் நீதிமன்றத்திலும் அவ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு எதிரான ஆதாரங்களை அளித்துள்ளேன். இந்த நடவடிக்கையைத் தொடங்கிய நாள் முதல் பல்வேறு தரப்பில் இருந்து எனக்கு நெருக்குதல் தரப்படுகிறது. தமிழகத்தைச் சேர்ந்த நான், அங்குள்ள திராவிடக் கட்சிகளில் சேர விரும்பவில்லை. தேசிய அளவில் நல்லாட்சியை வழங்கும் கொள்கையுடன் செயல்படும் பாஜகவில் சேர்ந்து ஊழலுக்கு எதிரான எனது பணியைத் தொடர விரும்பினேன். ஏற்கெனவே, 2ஜி அலைக்கற்றை வழக்கினால் பல்வேறு இன்னல்களை அனுபவித்து வருகிறேன். ரயில்வே துறையில் நான் வகித்து வந்த அதிகாரி பணியில் இருந்து விருப்ப ஓய்வு பெற்றுள்ளேன். அதைத் தொடர்ந்து, இனி முழு நேர அரசியலில் ஈடுபடவுள்ளேன். பாஜக மேலிடம் எனக்கு அளிக்கும் எல்லா பணிகளையும் முழு ஈடுபாட்டுடன் செய்வேன்' என்றார் ஆசீர்வாதம் ஆச்சாரி.
அவரைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சுப்பிரமணியன் சுவாமி, "ஆசீர்வாதம் ஆச்சாரியுடன் எனக்கு நீண்ட காலமாக நட்பு இருந்துவருகிறது. அவரது உதவியால்தான் 2ஜி அலைக்கற்றை வழக்கில் பல்வேறு வழக்குகளைத் தொடரவும் அதற்குத் தேவையான ஆவணங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவும் முடிந்தது. அதன் விளைவாகவே, நாட்டின் இயற்கை வளமான அலைக்கற்றையை ஏலம் மூலம்தான் வழங்க வேண்டும் என்ற வரலாற்றுச் சிறப்பமிக்க தீர்ப்பை உச்ச நீதிமன்றம் அளித்தது. ஆசீர்வாதத்துடன் சேர்ந்து ஊழலுக்கு எதிரான எங்கள் பயணத்தைத் தொடருவோம். தமிழக பாஜகவில் ஆசீர்வாதம் ஆச்சாரிக்கு சிறந்த பொறுப்பு அளிக்கப்படும் என்று நம்புகிறேன்' என்றார்.
ஆசீர்வாதம் யார்?: தமிழகத்தின் திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஆசீர்வாதம் ஆச்சாரி. மத்திய தொலைத்தொடர்பு அமைச்சராக ஆ. ராசா இருந்தபோது, அவரது கூடுதல் தனிச் செயலராக பணியாற்றினார். அடிப்படையில் ரயில்வே துறையில் செக்ஷன் அதிகாரியாக இருந்தவர். ராசாவுடன் சுமார் 10 ஆண்டுகளுக்கும் மேலாக நெருங்கிப் பழகியவராகக் கருதப்பட்டார். 2007-ஆம் ஆண்டு அலைக்கற்றை விவகாரத்தில் ராசாவுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டபோது, தொலைத்தொடர்புத் துறையில் பணியாற்றிக் கொண்டே அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பான ஆதாரங்களை சிபிஐக்கு அளித்தார். இதனால், அவரை அவ்வழக்கில் முக்கிய சாட்சியாக சிபிஐ சேர்த்துள்ளது.