முதுநிலை மாணவர் சேர்க்கை இடஒதுக்கீடு விவகாரம் தொடர்பான வழக்குகள் மீது உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 17) விசாரணை நடத்தவுள்ளது.
அரசுப் பணியில் உள்ள மருத்துவர்களுக்கு முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கையில் இட ஒதுக்கீடு அளிப்பது தொடர்பான இந்திய மருத்துவ கவுன்சில் விதிமுறைகளை எதிர்த்து தமிழ்நாடு மருத்துவர் அலுவலர் சங்கம் உள்ளிட்டவை சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் குரியன் ஜோசப், எம்.எம். சந்தான கவுடர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் கடந்த வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், "இந்த விவகாரத்தின் முக்கியத்துவம் கருதி இந்த வழக்கின் விசாரணையை அரசியல் சாசன அமர்வு விசாரிக்கப் பரிந்துரைக்கிறோம். இந்த வழக்கு தொடர்பாக உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி அமர்வில் திங்கள்கிழமை சென்று முறையிடலாம்' எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு முன் தமிழ்நாடு மருத்துவர் அலுவலர் சங்கம் சார்பில் மூத்த வழக்குரைஞர் முகுல் ரோத்தகி திங்கள்கிழமை ஆஜராகி இந்த வழக்கை அரசியல் சாசன அமர்வு விரைவில் விசாரிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார். இதை ஏற்றுக் கொண்ட தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, இந்த வழக்கை உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 17) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளும்' என்றார்.