குஜராத் மாநில தலித் சமூகத் தலைவரும் சுயேச்சை எம்எல்ஏவுமான ஜிக்னேஷ் மேவானிக்கும், தனக்கும் தொடர்ந்து கொலை மிரட்டல்கள் வருவதாக, தில்லி ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழக (ஜேஎன்யு) மாணவர் சங்கத் தலைவர் உமர் காலித் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தில்லி காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.
இதுகுறித்து சுட்டுரையில் அவர் சனிக்கிழமை வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:
நிழல் உலக தாதா ரவி பூஜாரியிடம் இருந்து ஜிக்னேஷ் மேவானிக்கும் எனக்கும் கொலை மிரட்டல்கள் வந்துள்ளன. மேவானிக்கு கடந்த 2-3 நாள்களாக வந்த தொலைபேசி அழைப்புகளில் இருவருக்கும் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து என்னிடம் மேவானி தகவல் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து, நான் தில்லி காவல்துறையில் புகார் அளித்தேன். எனக்கு பாதுகாப்பு தரும்படி காவல்துறையிடம் கேட்டுக் கொண்டுள்ளேன். இதுகுறித்து உரிய முடிவை எடுப்பதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த ரவி பூஜாரிதான், கடந்த 2016ஆம் ஆண்டிலும் எனக்கு கொலை மிரட்டல் விடுத்தார் என்று உமர் காலித் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, நாடாளுமன்ற தாக்குதல் வழக்கு குற்றவாளி அப்சல் குரு தூக்கிலிடப்பட்டதற்கு எதிராக, ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த 2016-இல் நடைபெற்ற சர்ச்சைக்குரிய நிகழ்ச்சி தொடர்பாக உமர் காலித் மீது தேச விரோத வழக்கு பதிவு செய்யப்பட்டது. அந்த காலகட்டத்தில் அவருக்கு கொலை மிரட்டல்கள் வந்ததாக புகார் எழுந்தது.