இரட்டைக் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்தவரும், கூலிப்படையைச் சேர்ந்தவருமான சோனு (எ) ஷெளகேந்திரா (28) நொய்டா போலீஸாரால் தில்லியில் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டார்.
இதுகுறித்து காவல் துறை உயரதிகாரி சனிக்கிழமை கூறியதாவது:
கடந்த 2011-ஆம் ஆண்டு உத்தரப் பிரதேச மாநிலத்தில் பாபர் என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் அதே மாநிலம் மீரட்டைச் சேர்ந்த சோனு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அப்போது, துஜானா மற்றும் அவரது கும்பலுடன் சோனுவுக்கு தொடர்பு ஏற்பட்டது. அக்கும்பலினர் சோனுவை ஜாமீனில் எடுக்க உதவி செய்தனர்.
சிறையிலிருந்து 14 மாதங்கள் கழித்து வெளியே வந்த சோனு, துஜானா கும்பலுடன் சேர்ந்து கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்தார். மேலும், 5 கொலைகளையும் செய்துள்ளார். இதில் முன்விரோதம் காரணமாக இருவரைக் கொலை செய்துள்ளார்.
இதனிடையே, சோனுவின் தந்தை வேறு கும்பலால் கொலை செய்யப்பட்டார். இதற்கு பழி தீர்க்கும் வகையில், அந்தக் கும்பலைச் சேர்ந்த ஒருவரின் தந்தை, தாய் இருவரையும் சோனு சொலை செய்தார். இந்த வழக்கில் அவர் தேடப்பட்டு வந்தார்.
அவர் குறித்து தகவல் அளிப்போருக்கு ரூ.1 லட்சம் வெகுமதி அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
அவரை தீவிரமாக தேடி வந்த நிலையில், தில்லியில் அவர் தங்கியிருப்பதாகத் தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸார் கண்காணிப்பைத் தீவிரப்படுத்தினர்.
இருப்பினும், கடந்த ஓராண்டாக தனது பெயரையும் இருப்பிடத்தையும் மாற்றி தில்லியில் வசித்து வந்தார். இந்நிலையில், ரகசியத் தகவலின் அடிப்படையில் தில்லியில் உள்ள கீதா காலனியில் அவரை நொய்டா போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது என அந்த அதிகாரி தெரிவித்தார்.