ஹரியாணா மாநிலம், குருகிராமில் கூடுதல் செசன்ஸ் நீதிபதியின் மனைவி, மகனை பாதுகாவலர் துப்பாக்கியால் சுட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறியதாவது:
நீதிபதியின் மனைவி ரிது (37), மகன் துருவ் (17) ஆகியோர் அர்காடியா சந்தைப் பகுதிக்கு சனிக்கிழமை மாலை 5.30 மணியளவில் வந்தனர். அவர்களுடன் பாதுகாவலர் ஒருவரும் உடனிருந்தார். ரிதுவுக்கும், பாதுகாவலருக்கும் இடையே காரசாரமான வாக்குவாதம் நடைபெற்றது. அப்போது தன்னிடம் இருந்த துப்பாக்கியை எடுத்து அவரை பாதுகாவலர் சுட்டார். அவரை தடுக்க முயன்ற துருவையும் அவர் சுட்டார் என்று நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.
அங்கிருந்து தப்பியோடிய காவலரை போலீஸார் மடக்கி பிடித்தனர். அவர்களை நோக்கியும் அவர் துப்பாக்கியால் சுட முயன்றார். எனினும், அவரை கைது செய்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். காயமடைந்த இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.