கேரள வெள்ள நிவாரணத்துக்கு ரூ. 1 கோடி வசூலித்து அளிக்கப்படும் என கிழக்கு தில்லி மாநகராட்சி (இடிஎம்சி) அறிவித்துள்ளது.
இது குறித்து அதன் மேயர் பிபின் பிகாரி சிங் செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது: கிழக்கு தில்லி மாநகராட்சி நிதி நெருக்கடியை சந்தித்து வந்தாலும், பெரும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மாநில மக்களின் துயர் துடைக்கும் பணியில் பங்கெடுக்க விரும்புகிறது. இதன் ஒரு பகுதியாக கேரள வெள்ள நிவாரணத்துக்கு ரூ. 1 கோடி வசூலித்து அளிக்கப்படும். வெள்ள நிவாரணத்துக்கு கிழக்கு தில்லி மாநகராட்சி அதிகாரிகளும், ஊழியர்களும் நன்கொடை அளித்து வருகின்றனர். இத்துடன் கிழக்கு தில்லி மாநகராட்சி கவுன்சிலர்களும் அவர்களால் இயன்ற தொகையை நன்கொடையாக அளித்து வருகின்றனர்.
கிழக்கு தில்லி மாநகராட்சியின் குரூப் ஏ-பிரிவு அதிகாரிகள் தலா ரூ. 2 ஆயிரமும், பி-பிரிவு அதிகாரிகள் தலா ரூ. 1,500, சி-பிரிவு அதிகாரிகள் தலா ரூ. 500, டி-பிரிவு அதிகாரிகள் ரூ. 250 என்ற வீதத்தில் வெள்ள நிவாரணத்துக்கு அளித்து வருகின்றனர். கேரள வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் கிழக்கு தில்லிவாசிகள் நிதியளித்து உதவ வேண்டும் என்றார் அவர்.
கேரள வெள்ள நிவாரணத்துக்கு, தெற்கு தில்லி மாநகராட்சி (எஸ்டிஎம்சி) கவுன்சிலர்கள் மற்றும் ஊழியர்கள் தங்களது ஒருநாள் ஊதியத்தை அளிக்க முடிவு செய்தனர். மேலும், மாநகராட்சி காங்கிரஸ் கவுன்சிலர்கள் ஓராண்டு படித் தொகையை கூடுதலாக வழங்கவும் கடந்த புதன்கிழமை முடிவு செய்தது குறிப்பிடத்தக்கது.