அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு திங்கள்கிழமை வரலாறு காணாத அளவில் 72.45-ஆக வீழ்ச்சி கண்டது.
அமெரிக்கா-சீனா இடையே வர்த்தகப் போர் வலுக்க கூடும் என்ற நிலைப்பாடு, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு , நடப்பு கணக்கு பற்றாக்குறை அதிகரிப்பு, டாலருக்கான தேவை அதிகரிப்பு ஆகிய காரணங்களால், திங்கள்கிழமை நடைபெற்ற அந்நியச் செலாவணி சந்தையில் வர்த்தகத்தின் போது ரூபாய் ஒரு கட்டத்தில் 94 காசுகள் சரிவடைந்து 72.67 வரை சென்றது. அதன் பின்னர் வர்த்தகத்தின் இறுதிப் பகுதியில் சரிவிலிருந்து ஓரளவு மீண்டு மதிப்பு முன்னெப்போதும் காணப்படாத குறைந்தபட்ச அளவாக 72.45-ஆனது.
சென்செக்ஸ் 467 புள்ளிகள் சரிவு: ரூபாய் மதிப்பு சரிவால் நடப்பு கணக்கு பற்றாக்குறை மேலும் அதிகரிக்கும் என்ற நிலைப்பாடு முதலீட்டாளர்கள் மத்தியில் எழுந்தது. இந்த நிலையில், அமெரிக்கா-சீனா இடையே வர்த்தகப் போர் ஏற்பட வாய்ப்புள்ளதாக வெளியான செய்தியும் பங்குச் சந்தைகளுக்கு பாதகமாகவே அமைந்தது. இதையடுத்து, முதலீட்டாளர்கள் லாப நோக்கம் கருதி பங்குகளை விற்பனை செய்தனர். இதனால் பல துறைகளைச் சேர்ந்த முன்னணி நிறுவனப் பங்குகளின் விலை குறைந்த விலைக்கு கைமாறின.
மும்பை பங்குச் சந்தையில் திங்கள்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் சென்செக்ஸ் 467 புள்ளிகள் வீழ்ச்சி கண்டு 37,922 புள்ளிகளில் நிலைத்தது. மார்ச் 16-ஆம் தேதிக்கு பிறகு ஏற்படும் ஒருநாள் அதிகபட்ச சரிவு இதுவாகும். தேசிய பங்குச் சந்தை குறியீட்டெண் நிஃப்டி 151 புள்ளிகள் சரிந்து 11,438 புள்ளிகளில் நிலைத்தது.