மராத்தா சமூகத்தினருக்கு இடஒதுக்கீடு அளிக்க வலியுறுத்தி, மகாராஷ்டிர மாநிலம், அகமதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த 11-ஆம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து காவல் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
அகமதுநகர் மாவட்டம், கபூர்வாடி கிராமத்தைச் சேர்ந்த கிஷோரி பாபன் கானடே என்னும் 11-ஆம் வகுப்பு மாணவி அவரது பள்ளி விடுதியில் உள்ள அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது தற்கொலைக்கான காரணத்தை கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார். அந்த கடிதத்தில், "ஏழைக்குடும்பத்தில் விவசாயிக்கு மகளாக பிறந்த நான் பத்தாம் வகுப்பில் 89 சதவீத மதிப்பெண்கள் பெற்றேன். ஆனால் இடஒதுக்கீடு முறையில் குறைந்த கட்டணத்தில் படிக்க வழியில்லாததால், என் குடும்பத்தினர் கஷ்டப்பட்டு ரூ. 8000 செலுத்தி படிக்க வைக்கிறார்கள். அதே நேரத்தில், இடஒதுக்கீடு சலுகை பெற்ற என்னுடன் படிக்கும் மாணவிகள் சிலர் ரூ.1000 கட்டணமாக செலுத்தி படிக்கிறார்கள். ஆனால் அவர்கள் பத்தாம் வகுப்பில் 76 சதவீதம் மட்டுமே பெற்றுள்ளனர். மராத்தா சமூகத்தில் பிறந்த ஒரு காரணத்துக்காக எனக்கு அநீதி இழைக்கப்பட்டது. என்னுடைய இந்த உயிர்த்தியாகம் மராத்தா இடஒதுக்கீட்டு போராட்டத்தை வலுப்படுத்தும் என நம்புகிறேன்' என்று அவர் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார் என்று அந்த அதிகாரி கூறினார்.
மாணவியின் தற்கொலைக்கு மகாராஷ்டிர அரசு தான் காரணம் என்று மராத்தா சமூக அமைப்புகள் குற்றம் சாட்டியுள்ளன.
மகாராஷ்டிர மாநிலத்தில் 30 சதவீத மக்கள் தொகையை கொண்டுள்ள மராத்தா சமூகத்தினர், அரசு வேலைவாய்ப்பு மற்றும் கல்வியில் 16 சதவீத இடஒதுக்கீடு கோரி கடந்த ஜூலை மாதத்தில் இருந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த போராட்டத்தின் போது பல கலவரங்களும் வெடித்தன. மராத்தா இடஒதுக்கீடை வலியுறுத்தி, கடந்த 2 மாதத்தில் இதுவரை 8 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.