தில்லியில் சமூக வலைதளத்தில் துப்பாக்கியுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டதாக இருவர் கைது செய்யப்பட்டனர்.
இதுகுறித்து போலீஸார் கூறியதாவது: பாரத் விஹார், ஜே.ஜே. காலனியைச் சேர்ந்த சாஹில் (18), ஆசிஃப் (19) என்ற இருவர், தாங்கள் துப்பாக்கி வைத்திருப்பது போன்ற புகைப்படத்தை சமூக வலைதளங்களில் வெளியிட்டனர். இதுதொடர்பாகத் தகவல் கிடைத்ததை அடுத்து சாஹில் மற்றும் ஆசிஃப் இருவரும் கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடம் இருந்து 3 துப்பாக்கிகள், 2 தோட்டாக்கள், பயன்படுத்தப்பட்ட தோட்டா ஒன்று ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. அத்துடன், அவர்கள் சமூக வலைதளத்தில் வெளியிட்ட புகைப்படம் எடுக்கப்பட்ட செல்லிடப்பேசியும் பறிமுதல் செய்யப்பட்டது. அதில், வானை நோக்கி துப்பாக்கியால் சுடும் காணொலிப் பதிவு ஒன்றும் இருந்தது.
விசாரணையில், சமூக வலைதளத்தில் இருக்கும் தனது நண்பர்களிடம் பிரபலம் அடையும் நோக்கில் துப்பாக்கியுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டதாக சாஹில் கூறினார். சட்டவிரோதமாக துப்பாக்கி விற்பனை செய்து வந்த ஆசிஃப்பும் அவ்வாறு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். ஆசிஃப், சாஹிலுக்கு 2 துப்பாக்கிகளை விற்பனை செய்துள்ளார் என்று போலீஸார் கூறினர்.