தமிழ்நாடு சிறப்புக் காவல் படை 8-ஆவது அணியின் சார்பில் தில்லி திகார் சிறையில் ஞாயிற்றுக்கிழமை சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.
கமாண்டன்ட் ஏ.ஜனகன் தலைமை வகித்தார். உதவி கமாண்டன்ட் வெங்கடாசலம் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக ஜனக்புரி கவுன்சிலர் வீணா சர்மா, தில்லி தமிழ்ச் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஆர்.முகுந்தன் ஆகியோர் கலந்து கொண்டு முகாமைத் தொடக்கிவைத்தனர்.
முகாமில், தோல், பல், பொது மருத்துவம், ஆயுர்வேதம், ஹோமியோபதி மற்றும் சித்த மருத்துவம் உள்ளிட்ட எட்டு வகையான மருத்துவர்கள் கலந்து கொண்டு மருத்துவ சிகிச்சை மற்றும் ஆலோசனைகளை வழங்கினர். மருத்துவர்களுக்கு நிகழ்ச்சியில் நினைவுப் பரிசு வழங்கப்பட்டது. இதில் காவலர்கள், அவர்களது குடும்பத்தினர் சுமார் 500-க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்று மருத்துவ சிகிச்சை, ஆலோசனைகளைப் பெற்றனர். காவல் ஆய்வாளர் எம்.பட்டேல் நன்றி கூறினார். மருத்துவ முகாமுக்கான ஏற்பாடுகளை சமூக ஆர்வலர் எம்.எஸ். ரவி செய்திருந்தார்.