சுதந்திர தினத்தையொட்டி தில்லியில் புதன்கிழமை தேசியக் கொடியுடன் பாஜகவின் சைக்கிள் பேரணி நடைபெற்றது.
தில்லி பாஜகவின் முன்னாள் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான விஜய் கோயல் ஏற்பாடு செய்திருந்த இந்த நிகழ்ச்சியில், மத்திய சுற்றுச்சூழல் துறை இணையமைச்சர் பாபுல் சுப்ரியோ, பாஜக எம்.பி. சஞ்சிவ் பல்யான் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இவர்கள் அசோகா சாலையில் இருந்து இந்தியா கேட்டில் உள்ள அமர் ஜவான் ஜோதி வரை சைக்கிளில் பேரணியாகச் சென்றனர். இந்த நிகழ்வில் பாபுல் சுப்ரியோ பேசுகையில், "நாட்டு மக்கள் அனைவரும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தருணத்தில் உள்ளனர்.
காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதால், காஷ்மீரில் இருந்து கன்னியாகுமரி வரை நாடு ஒன்றாக இணைந்துள்ளது. இதைப் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் சாத்தியப்படுத்தியுள்ளனர்' என்றார்.
விஜய் கோயல் பேசுகையில் "இந்தியாவில் இருந்த சிறிய தேசங்களை ஒருங்கிணைத்து நவீன இந்தியாவை சர்தார் வல்லபபாய் படேல் கட்டமைத்தார். அதேபோல, காஷ்மீரை முழுமையாக இந்தியாவுடன் இணைத்ததன் மூலம் நவீன சர்தார் படேலாக மோடி உள்ளார். பயங்கரவாதிகள், நக்சல்கள், ஊழல் ஆகியவற்றுக்கு எதிராகப் போராடும் பிரதமர் வரலாற்று நாயகனாக உள்ளார்' என்றார்.