சகோதர பாசத்தை வெளிப்படுத்தும் ரக்ஷா பந்தன் பண்டிகையையொட்டி, தில்லி போக்குவரத்து நிறுவன (டிடிசி) பேருந்துகளில் பெண்களுக்கு வியாழக்கிழமை இலவச பயணச் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தில்லி அரசின் மூத்த அதிகாரி புதன்கிழமை கூறியதாவது: ரக்ஷா பந்தன் பண்டிகையன்று சகோதரர்களுக்கு ராக்கி கட்ட செல்லும் பெண்களுக்கு டிடிசி ஆண்டுதோறும் இலவச பயணச் சலுகை அளித்து வருகிறது. இந்த ஆண்டு சுதந்திர தினமும், ரக்ஷா பந்தன் பண்டிகையும் வியாழக்கிழமை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, வியாழக்கிழமை காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை டிடிசி குளிர்சாதனப் பேருந்துகள், சாதாரண பேருந்துகள் ஆகியவற்றில் பெண்களுக்கு இலவச பயணம் அளிக்கப்படும். கூட்ட நெரிசலைத் தடுக்க கூடுதல் பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.