மத்திய தில்லியில் உள்ள தேஷ் பந்து குப்தா சாலையில் நேபாள இளைஞரை அவரது நண்பர் கத்தியால் குத்திக் கொலை செய்ததாக போலீஸார் தெரிவித்தனர். அற்ப விஷயத்துக்காக இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் இச்சம்பவம் நடந்துள்ளது.
இது குறித்து காவல் துறை உயரதிகாரி புதன்கிழமை கூறியதாவது:
நேபாள நாட்டைச் சேர்ந்தவர் விரேந்தர் (22). அதே நாட்டைச் சேர்ந்தவர் விஷால் (22). தேஷ் பந்து குப்தா சாலை பகுதியில் வசித்து வந்த இருவரும், தில்லியில் உள்ள ஹோட்டல்களில் வேலை பார்த்து வந்தனர்.
இருவரும் ஒருவருக்கு ஒருவர் நன்கு அறிமுகமானவர்கள். முன்பு மது அருந்தும் போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அச்சம்பவத்துக்கு பழிதீர்க்கும் வகையில், கடந்த திங்கள்கிழமை விரேந்தரை விஷால் கத்தியால் குத்தியுள்ளார்.
தகவல் அறந்த போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். இச்சம்பவத்தில் பலத்த காயமடைந்த விரேந்தரை போலீஸார் மீட்டு லேடி ஹார்டிங் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.
ஆனால், சிகிச்சையின் போது விரேந்தர் உயிரிழந்தார். அவரது உடலிலிருந்து அதிக அளவு ரத்தம் வெளியேறியதால், அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக தேஷ் பந்து குப்தா சாலை காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. விஷாலிடம் இருந்து குற்றச்சம்பவத்தில் பயன்படுத்தப்பட்ட ஆயுதம் பறிமுதல் செய்யப்பட்டது என்று அந்த அதிகாரி தெரிவித்தார்.