உத்தரப் பிரதேச மாநிலம், முசாஃபர்நகரில் தனது மனைவிக்கு உடனடியாக முத்தலாக் கூறிய விவகாரம் தொடர்பாக பல் மருத்துவர் ஒருவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
உடனடியாக மூன்று முறை "தலாக்' கூறி விவாகரத்து செய்யும் நடைமுறையைச் சட்டவிரோதமாக்கும் நோக்கில், முத்தலாக் தடை மசோதாவை மத்திய அரசு அண்மையில் நிறைவேற்றியது.
இந்நிலையில், முசாஃபர்நகர் பகுதியிலுள்ள முஸ்தாஃபாத் கிராமத்தில் பல் மருத்துவராகப் பணியாற்றி வரும் தஹீர் ஹாசன் என்பவர் தனது மனைவி சாயீரா பானுவுக்கு கடந்த ஏப்ரல் மாதம் 16-ஆம் தேதி மூன்று முறை தலாக் கூறி விவாகரத்து செய்வதாகக் கூறியுள்ளார்.
இதையடுத்து, முஸ்லிம் பெண்கள் திருமண உரிமை பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் மாண்டி காவல் நிலையத்தில் தஹீர் ஹாசன் மீது வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
திருமணத்தின்போது வாக்களித்திருந்த வரதட்சிணையை சாயீரா பானு குடும்பத்தினர் அளிக்காததையடுத்து, தஹீர் ஹாசன் தனது மனைவியை விவாகரத்து செய்ததாகக் காவல் துறையினரின் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
மகாராஷ்டிரத்தில் மற்றொரு வழக்கு: உடனடியாக மூன்று முறை தலாக் கூறி விவாகரத்து செய்தது தொடர்பாக, மகாராஷ்டிர மாநிலம், அகோலா மாவட்டத்தில் முகமது ஜாபர் என்பவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.