சீர்குலைந்து மோசமான நிலையில் உள்ள நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்துவதற்கு மத்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள், அரைகுறையானவை மற்றும் முழுமையற்றவை என்று காங்கிரஸ் விமர்சித்துள்ளது.
கடந்த 5 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு நாட்டின் பொருளாதார வளர்ச்சி சரிந்துள்ளதாக விமர்சனங்கள் எழுந்த நிலையில், வங்கிகளுக்கு கூடுதல் மூலதனமாக ரூ. 70 ஆயிரம் கோடியை உடனடியாக வழங்குவது, ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு வரி விலக்கு, உள்நாட்டு முதலீட்டு நிறுவனங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த கூடுதல் வரி வாபஸ் உள்ளிட்ட பல அறிவிப்புகளை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெள்ளிக்கிழமை வெளியிட்டார்.
அதைக் குறிப்பிட்டு காங்கிரஸ் தலைமை செய்தித் தொடர்பாளர் ரண்தீப் சுர்ஜேவாலா சுட்டுரையில் சனிக்கிழமை வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:
பிரதமர் நரேந்திர மோடி ஆட்சியில் நாட்டின் பொருளாதாரம் மிகப்பெரும் சரிவைச் சந்தித்ததுடன், மந்த நிலையிலும் உள்ளது. மத்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளால் நாட்டின் பொருளாதாரம் மோசமான நிலையில் உள்ள நிலையில், அவர்கள் மேற்கொண்ட நடவடிக்கைகளில் சிலவற்றையே நிர்மலா சீதாராமன் திரும்பப் பெற்றுள்ளார்.
பாஜக ஆட்சியினால் பொருளாதாரம் சீர்குலைந்ததை வெறும் அரைகுறை அறிவிப்புகளால் நிர்மலா சீதாராமன் மறைக்கப் பார்க்கிறார் என்றார் ரண்தீப் சுர்ஜேவாலா.