மக்களவைத் தேர்தலுக்காக உத்தரப் பிரதேச மாநிலத்தில், உள்ளூர் கட்சியான மஹான் தளம் கட்சியுடன் காங்கிரஸ் கூட்டணி அமைத்துள்ளது.
இதற்கான அறிவிப்பு, மாநில காங்கிரஸ் அலுவலகத்தில் கிழக்கு உத்தரப் பிரதேசத்துக்கான காங்கிரஸ் பொதுச் செயலர் பிரியங்கா காந்தி முன்னிலையில் வெளியிடப்பட்டது. அந்த அறிவிப்பை, மேற்கு உத்தரப் பிரதேசத்துக்கான காங்கிரஸ் பொதுச் செயலர் ஜோதிராதித்ய சிந்தியா, மஹான் தளம் கட்சித் தலைவரான கேசவ் தேவ் மெளரியா ஆகியோர் கூட்டாக வெளியிட்டனர்.
அப்போது பிரியங்கா காந்தி பேசுகையில், "காங்கிரஸ் கூட்டணிக்கு கேசவ் தேவ் மெளரியாவை வரவேற்கிறோம். சமூகத்தின் அனைத்து தரப்பினரையும் ஒருங்கிணைக்கும் அரசியல் சூழலை உருவாக்கக் கூடிய பணியை கட்சித் தலைவர் ராகுல் காந்தி நமக்கு அளித்துள்ளார். அதை நோக்கி, வரும் மக்களவைத் தேர்தலை நாம் முழு வலிமையுடன் எதிர்கொள்வோம்' என்றார்.
மஹான் தளம் கட்சி, கடந்த 2009 மற்றும் 2014-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல்களிலும் காங்கிரஸுடன் கூட்டணி அமைத்திருந்தது. எனினும், 2017-இல் உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் அக்கட்சி தனித்து போட்டியிட்டது. அக்கட்சி போட்டியிட்ட பதாயுன், நாகினா, எட்டா ஆகிய 3 தொகுதிகளிலும் தோல்வியைத் தழுவியது.