காஷ்மீர் மக்கள் மீதான தாக்குதலைத் தடுக்க நடவடிக்கை தேவை என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து அக்கட்சியின் அரசியல் தலைமைக் குழு ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
நாட்டின் பல்வேறு பகுதிகளில் காஷ்மீர் மக்கள், மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் கவலை அளிக்கும் வகையில் உள்ளது. டேராடூனில் காஷ்மீர் மாணவர்கள் மீது பஜ்ரங் தளம், விஎச்பி அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
புல்வாமாவில் 40 சிஆர்பிஎஃப் வீரர்கள் பலியான தற்கு காரணமான பயங்கரவாதத் தாக்குதல் அனைவரையும் கோபமடையச் செய்துள்ளது.
இந்த சூழலைப் பயன்படுத்தி காஷ்மீர் மக்கள் மீது தாக்குதல் நடத்துவது கண்டிக்கத்தக்கது. எனவே, காஷ்மீர் மக்களுக்கு உரிய பாதுகாப்பை வழங்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். வெறுப்பு, வன்முறை பிரசாரம் செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.