பாஜக-ஆம் ஆத்மி கட்சிகளின் நிழல் யுத்தத்தால் தில்லியின் வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளது என்று தில்லி காங்கிரஸ் கட்சித் தலைவர் ஷீலா தீட்சித் கூறினார்.
தில்லி நஜஃப்கரில் காங்கிரஸ் தொண்டர்கள் மாநாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு ஷீலா தீட்சித் பேசுகையில், "காங்கிரஸ் ஆட்சியில் வளர்ச்சித் திட்டங்கள் வேகமாக நடைபெற்றன. ஆம் ஆத்மி ஆட்சியில் தொடங்கப்பட்டுள்ள வளர்ச்சித் திட்டங்கள் மோசமான நிலையில் உள்ளன. சாலைகள் குண்டும் குழியுமாக காணப்படுகின்றன. மத்தியில் ஆளும் பாஜக, மாநிலத்தை ஆளும் ஆம் ஆத்மி இடையே நடைபெறும் நிழல் யுத்தத்தில் தில்லியின் வளர்ச்சி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
கடந்த மக்களவைத் தேர்தலில் அளித்த வாக்குறுதிகளை பிரதமர் மோடி நிறைவேற்றவில்லை. பொய்யான வாக்குறுதிகளைக் கண்டு விவசாயிகள் இம்முறை ஏமாந்து விடக்கூடாது என்றார்.
இந்நிகழ்ச்சியில், முன்னாள் எம்.பி. மஹாபல் மிஸ்ரா, தில்லி காங்கிரஸ் கமிட்டி செயல் தலைவர் ராஜேஷ் லிலோத்தியா, முன்னாள் எம்எல்ஏக்கள் சுமேஷ் சோகின், தயானந்த், அனில் பரத்வாஜ், நஜஃப்கர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஓம் தத் யாதவ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.