மேற்கு தில்லி மோதி நகரில் உள்ள தொழிற்சாலையில் நிகழ்ந்த விபத்து தொடர்பாக அதன் இணை உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேற்கு தில்லி மோதி நகரில் மின்விசிறிகளுக்கான தகடுகளைத் தயாரிக்கும் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த ஆலையில் மின்விசிறித் தகடுகளை உருவாக்கும் எரிவாயு இயந்திரம் வியாழக்கிழமை இரவு திடீரென பலத்த சப்தத்துடன் வெடித்தது. இதில் ஆலை கட்டடத்தின் ஒருபகுதி இடிந்தது. இந்த விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர். 8 பேர் காயமடைந்தனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடைபெற்று வந்தது. இந்நிலையில், இந்த தொழிற்சாலையின் இணை உரிமையாளரான சுமித் குப்தா போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதுதொடர்பாக காவல்துறை உயரதிகாரி கூறுகையில், இந்த விபத்தில் சிக்கிய தொழிற்சாலையின் உரிமையாளர்களில் ஒருவரான அங்கித் குப்தா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மற்றொரு உரிமையாளரான சுமித் குப்தா தலைமறைவாக இருந்தார். அவர் வெள்ளிக்கிழமை இரவு கைது செய்யப்பட்டார்' என்றார் அவர்.