தில்லியில் தகராறில் இளைஞர் ஒருவர், குழி தோண்டப் பயன்படுத்தப்படும் ஆயுதத்தால் தாக்கிக் கொல்லப்பட்டார். கடந்த வியாழக்கிழமை நிகழ்ந்த இந்தச் சம்பவம் குறித்து காவல் துறை உயரதிகாரி சனிக்கிழமை கூறியதாவது:
இந்த மோதலில் கொல்லப்பட்ட இளைஞர் கெளதம் குமார் என அடையாளம் காணப்பட்டுள்ளது. பாதுகாவலாளியான இந்திரஜித் மிஸ்ரா, வியாழக்கிழமை இரவு 8 மணியளவில் ரானே பார்க்கில் உள்ள தனது சகோதரியின் வீட்டுக்குச் சென்றுள்ளார். அப்போது மைத்துனர் கெளதம் குமாரையும் சந்தித்துள்ளார்.
இந்திரஜித் மிஸ்ராவும், கெளதம் குமாரும் வீட்டின் அருகில் சாலையோரத்தில் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த தொழிலாளியான சஞ்சய் (29) மினி டிரக்கில் வந்துள்ளார். அந்தச் சமயத்தில் அப்பகுதியில் கெளதம் குமார் நிறுத்தியிருந்த இரு சக்கர வாகனத்தில் சஞ்சயின் மினி டிரக் மோதியது. இதையடுத்து, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது, அருகில் கிடந்த குழிதோண்டப் பயன்படுத்தப்படும் ஆயுதத்தால் கெளதம் குமாரை சஞ்சய் தாக்கினார். இதில் கெளதம் குமாருக்கு தலையில் பலத்த காயமேற்பட்டது.
அவர் பாபா சாஹிப் அம்பேத்கர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால், அங்கு அவர் உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு சஞ்சய் அன்று இரவே கைது செய்யப்பட்டார். கெளதம் குமாரை தாக்குவதற்குப் பயன்படுத்திய ஆயுதமும் கைப்பற்றப்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்தில் சஞ்சய் அல்லது கெளதம் குமார் ஆகிய இருவரில் ஒருவர் குடிபோதையில் இருந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. மேலும், விசாரணை நடைபெற்று வருகிறது என்றார் அந்த அதிகாரி.