தில்லி கௌடில்யா மார்கில் உள்ள தமிழ்நாடு வைகை இல்லத்தில் ஜனவரி 15-ஆம் தேதி (தை மாதப் பிறப்பு) பொங்கல் விழா நடைபெறவுள்ளது.
இந்த விழாவை தமிழ்நாடு அரசின் சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம் தொடங்கி வைக்கிறார். விழாவையொட்டி, அன்று பிற்பகல் 3 மணிக்கு பவானி பிரசனாலயா சார்பில் பரதநாட்டியம் நடைபெறுகிறது. பிற்பகல் 3.15 மணிக்கு தமிழ்நாடு கலை, பண்பாட்டுத் துறை சார்பில் சோமசுந்தரம் குழுவினரின் கலாசார நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.
மாலை 4 மணிக்கு தமிழ்நாடு இல்ல ஊழியர்கள், குழந்தைகள், தமிழ் பண்பாட்டு வகுப்பு மாணவர்கள் வழங்கும் கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. பொங்கல் விழா போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு மாலை 4.30 மணிக்கு நடைபெறும் நிகழ்ச்சியில் பரிசுகள் வழங்கப்படும். இதைத் தொடர்ந்து, மாலை 5 மணிக்கு தில்லி தமிழ்க் கல்விக் கழகப் பள்ளி (டிடிஇஏ) மாணவர்களின் நாடகம், எய்ம்ஸ் மருத்துவமனை பணியாளர்கள் வழங்கும் நடனம், தில்லி பல்கலைக்கழக மாணவர்களின் நாடகம், நடனம் ஆகியவை நடைபெறும்.
மாலை 5.40 மணிக்கு நாவலர் நந்தலாலா குழுவினர் சார்பில் பட்டிமன்றமும், இதைத் தொடர்ந்து, தமிழ்நாடு கலை, பண்பாட்டுத் துறை சார்பில் சோமசுந்தரம் குழுவினரின் கலாசார நிகழ்ச்சிகளும் நடைபெறும்.