காங்கிரஸ் தலைவராக ஷீலா தீட்சித் பதவியேற்பு

காங்கிரஸ் கட்சியின் தில்லி தலைவராக முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித் புதன்கிழமை பதவியேற்றுக் கொண்டார். அவரை மேள தாளம் முழங்க கட்சியினர் வரவேற்றனர்.  

காங்கிரஸ் கட்சியின் தில்லி தலைவராக முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித் புதன்கிழமை பதவியேற்றுக் கொண்டார். அவரை மேள தாளம் முழங்க கட்சியினர் வரவேற்றனர்.  
தில்லி காங்கிரஸ் தலைவராக இருந்த அஜய் மாக்கன் (54) தனது பதவியை கடந்த ஜனவரி 4-ஆம் தேதி ராஜிநாமா செய்தார். இதையடுத்து, கட்சியின் புதிய தலைவராக ஷீலா தீட்சித்தை கட்சியின் தலைவர் ராகுல் காந்தி நியமித்தார். ஷீலா தீட்சித்துக்கு உதவும் வகையில் தேவேந்திர யாதவ், ராஜேஷ் லிலோத்தியா, ஹாரூண் யூசுஃப் ஆகியோர் செயல் தலைவர்களாக நியமிக்கப்பட்டனர்.
இந்நிலையில், தில்லி தீனதயாள் உபாத்யாய் மார்கில் உள்ள தில்லி பிரதேச காங்கிரஸ் அலுவலகமான ராஜீவ் பவனில் புதன்கிழமை புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள ஷீலா தீட்சித் பதவியேற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதையொட்டி, ராஜீவ் பவனுக்கு காலை வந்த ஷீலா தீட்சித்தை கட்சித் தொண்டர்கள் மேள தாளம் முழங்க வரவேற்றனர். "மாற்றத்துக்கான புயலை ஷீலா தீட்சீத் கொண்டு வந்திருக்கிறார்' என்று தொண்டர்கள் கோஷமிட்டனர்.
இதையடுத்து, கட்சியின் தலைவராக ஷீலா தீட்சித், புதிய செயல் தலைவர்களாக தேவேந்திர யாதவ், ராஜேஷ் லிலோத்தியா, ஹாரூண் யூசுஃப் ஆகியோர் பதவியேற்றுக் கொண்டனர். 
இந்த நிகழ்வில் முதல் வரிசையில் சீக்கியர்களுக்கு எதிரான கலவரத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஜெகதீஷ் டைட்லர் பங்கேற்றார். தவிர, மூத்த காங்கிரஸ் தலைவர்கள் கரண் சிங், ஜனார்தன் துவிவேதி, மீரா குமார், பி.சி. சாக்கோ, சந்தீப் தீட்சித், அஜய் மாக்கன் ஆகியோரும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர். 
பதவியேற்றுக் கொண்ட ஷீலா தீட்சித் கூறுகையில், "தில்லியில் காங்கிரஸ் கட்சியை உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்வேன். கட்சியின் அடிமட்டத் தொண்டர்களின் ஒத்துழைப்புடன் இதற்கான பணி மேற்கொள்ளப்படும். வரும் மக்களவைத் தேர்தலில் தில்லியில் உள்ள ஏழு தொகுதிகளிலும் வெற்றிபெற காங்கிரஸ் முழு முயற்சிகளை மேற்கொள்ளும்' என்றார்.
2013-ஆம் ஆண்டில் இருந்து தொடர்ந்து தேர்தல் தோல்விகளைச் சந்தித்து வரும் காங்கிரஸ் கட்சி, ஷீலா தீட்சீத் வருகையின் மூலம் புதிய வெற்றிகளை எதிர்நோக்கி உள்ளது. 

ஜெகதீஷ் டைட்லர் பங்கேற்புக்கு எதிர்ப்பு
இந்நிகழ்ச்சியில் சீக்கியர்களுக்கு எதிரான கலவர வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள அக்கட்சியைச் சேர்ந்த ஜெகதீஷ் டைட்லர் பங்கேற்றதை சிரோமணி அகாலி தளம் விமர்சித்துள்ளது.
இதுதொடர்பாக சிரோமணி அகாலிதளம் கட்சித் தலைவரும், தில்லி சீக்கிய குருத்வாரா மேலாண்மைக் குழுவின் பொதுச் செயலருமான மன்ஜீந்தர் சிங்  தெரிவித்ததாவது: 
சீக்கியர்களுக்கு எதிரான கலவர வழக்கில் ஜெகதீஷ் டைட்லர், கமல் நாத் ஆகியோரும் சிறைக்கு செல்வார்கள் என்பது தெரிந்ததால் காங்கிரஸ் பயப்படுகிறது. ஷீலா தீட்சித் பதவியேற்பு நிகழ்வில் முன்வரிசையில் ஜெகதீஷ் டைட்லரை அமர வைத்த செயல், சீக்கியர்களுக்கு எதிரான கலவர வழக்குகளில் தொடர்புடைய சாட்சிகளை அச்சுறுத்தும் வெளிப்படையான செயலாகும். இதன் மூலம், காங்கிரஸின் தலைமை ஜெகதீஷ் டைட்லரை ஆதரிக்கிறது என்பதையும், அவருக்கு எதிராக யாரும் சோதனை நிகழ்த்த முயற்சிக்க கூடாது என்பதையும் சாட்சிகளுக்கு செய்தியாக காங்கிரஸ் தெரிவிக்க விரும்புகிறது.
சஜ்ஜன் குமார் தண்டனை பெற்றுள்ளதால் காங்கிரஸ் கட்சி அச்சத்தில் உள்ளது. பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த தலைவர்கள் தற்போது சிறையில் இருந்து வருகின்றனர். காங்கிரஸின் இதுபோன்ற செயல் மூலம், அவர்களுக்கு எதிராக யாரும் நடவடிக்கை எடுக்கக் கூடாது என்பதை நீதித் துறை, காவல் துறை ஆகியவற்றுக்கு காங்கிரஸ் கட்சி செய்தி அனுப்பிக் கொண்டிருக்கிறது எனலாம். ஆனால், வழக்கில் இருந்து டைட்லரும், கமல்நாத்தும் தப்ப முடியாது. அவர்கள் நிச்சயமாக சிறைக்கு அனுப்பப்படுவர் என்று தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com