தில்லி ராஜீவ் செளக் மெட்ரோ ரயில் நிலையத்தில் ரயில் முன் குதித்து ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். அவர் ரோஹிணி ஈஎஸ்ஐ மருத்துவமனையின் முன்னாள் ஊழியர் என்று அடையாளம் காணப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர். இச்சம்பவத்தைத் தொடர்ந்து, துவாரகா - நொய்டா புளு வழித்தடத்தில் செவ்வாய்க்கிழமை காலையில் சுமார் 15 - 20 நிமிடங்கள் ரயில் சேவையில் பாதிப்பு ஏற்பட்டது.
இது குறித்து காவல் துறை துணை ஆணையர் (தில்லி மெட்ரோ) தினேஷ் குப்தா கூறியதாவது: தலைநகர் தில்லியில் எந்த நேரமும் மிகவும் பரபரப்பாகக் காணப்படும் ரயில் நிலையங்களில் ராஜீவ் செளக் மெட்ரோ ரயில் நிலையமும் ஒன்று. இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை காலையில் மிகவும் பரப்பரபான காலை நேரத்தில் ரயில் நிலையத்துக்கு வந்து கொண்டிருந்த மெட்ரோ ரயில் முன் 45 வயதுடைய ஒருவர் குதித்தார். இது தொடர்பாக காலை 9.35 மணியளவில் போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது.
போலீஸார் உடனடியாக சம்பவ இடத்துக்குச் சென்று அவரை மீட்டு அருகில் உள்ள லேடி ஹார்டிங் மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அவர் சிர்சாபூர் பகுதியைச் சேர்ந்த பிரமோத் குமார் என அடையாளம் காணப்பட்டது. அவர் ரோஹிணியில் உள்ள ஈஎஸ்ஐ மருத்துவமனையில் வேலைபார்த்தவர் என்றும் சில ஆண்டுகளுக்கு முன் பணியிலிருந்து விலகியுள்ளதும் விசாரணையில் தெரிய வந்தது.
5 ஆண்டுகளாக அவரது மனைவி பிரிந்து வாழ்ந்து வருகிறார். அவர்களுக்கு குழந்தை இல்லை. தற்போது எந்த வேலையும் இல்லாமல் இருந்து வந்த பிரமோத் குமார், தனியாக வசித்து வந்தார். அவர் இந்த முடிவை எடுத்ததற்கான காரணம் அவரது குடும்பத்தினருக்கு தெரியவில்லை. ஆனால், முதல் கட்ட விசாரணையில் சூழ்நிலை காரணமாக அவர் இந்த முடிவை எடுத்ததாகத் தெரிகிறது என்றார் அந்த அதிகாரி.