ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு அனுமதி கூடாது: மாநிலங்களவையில் திமுக வலியுறுத்தல் 

காவிரி டெல்டா பகுதியில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி அளிக்கக் கூடாது

காவிரி டெல்டா பகுதியில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி அளிக்கக் கூடாது என்று மாநிலங்களவையில் திமுக திங்கள்கிழமை வலியுறுத்தியது.
இது தொடர்பாக மாநிலங்களவையில் திங்கள்கிழமை பூஜ்ய நேரத்தில் திமுக உறுப்பினர் திருச்சி சிவா முன்வைத்த கோரிக்கை: 
காவிர் டெல்டா பகுதிகளான திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம் ஆகியவை தமிழகத்தின் களஞ்சியமாக அழைக்கப்படுகின்றன. 
சில ஆண்டுகளாக பருவமழை பொய்த்துப் போனது. நிலத்தடி நீர்மட்டம் குறைந்துவிட்டது. காவிரி ஆற்றில் நீர் வரவில்லை. இதனால், விவசாயிகளும் பொது மக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். 
அவர்கள் விவசாயத்தில் இருந்து வெளியேறும் நிலை உள்ளது. வேலைவாய்ப்பை அதிகம் வழங்கி வரும் விவசாயத் துறை, தற்போது மிகப் பெரிய 
நெருக்கடியை சந்தித்து வருகிறது. விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும் நிலையும் தொடர்கிறது.
இதுபோன்ற சூழலில் மத்திய அரசு ஹைட்ரோ கார்பன் ஆழ்துளைக் கிணறுகளைக் கொண்டு உள்ளது. ஹைட்ரோகார்பன் எடுப்பதற்காக 1,000 முதல் 2 ஆயிரம் மீட்டர் வரை ஆள்துளை கிணறுகள் தோண்டப்படுவதால், நிலத்தடி நீரைப் பெறுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. விவாயிகள் தங்களது ஆழ்துளைக் கிணறுகள் மூலம் தண்ணீரைப் பெற முடியாத சூழல் உள்ளது. 
ஓஎன்ஜிசி நிறுவனம் தவிர சில தனியார் நிறுவனங்களும் மத்திய அரசிடம் இதற்காக அனுமதி கோரியுள்ளது. இதை நிறுத்தக்கோரி மக்கள் மனித சங்கிலி போராட்டம் மேற்கொண்டனர். 
இத்திட்டத்தால் சுற்றுச்சூழக்கும் பாதிப்பு ஏற்படும். புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு நோய்கள் ஏற்படும். எனவே, இத்திடத்திற்கு அனுமதி தரக் கூடாது. 
மேலும், இதுபோன்ற திட்டங்களை மக்கள் வசிக்காத பாலைவனப் பகுதியில் செயல்படுத்தவும், ஏற்கெனவே நடைபெற்று வரும் அனைத்து செயல்பாடுகளையும் நிறுத்தவும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் அவர்.
வட்டார மொழிக்கு முன்னுரிமை: மாநிலங்களவையில் திங்கள்கிழமை அதிமுக உறுப்பினர் என்.கோகுல கிருஷ்ணன் சிறப்பு கவனம் குறிப்பில் முன்வைத்த கோரிக்கையில், "மத்திய அரசின் நிறுவனங்களில் குரூப் "சி' மற்றும் அயல்பணி அடிப்படையிலான குரூப் "டி' பணியிடங்களில் உள்ளூர் வட்டார மொழி பேசுவோரை நியமிக்க வேண்டும். 
புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள் நேரடியாக சிகிச்சைக்கு வரும் நோயாளிகளுடன் தொடர்பில் உள்ளனர். அவர்களுக்கு உள்ளூர் மொழி அறிந்திருப்பது அவசியமாகிறது. 
எனவே, மத்திய அரசின் நிறுவனங்களில் குரூப் "சி' மற்றும் அயல்பணி அடிப்படையிலான குரூப் "டி' பணியிடங்கள் நியமனங்களில் உள்ளூர் மக்களுக்கு முன்னுரிமை அளிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com