மத்திய அரசிடமிருந்து பல்வேறு திட்டங்களுக்காக தமிழகத்துக்கு வர வேண்டிய ரூ.11, 335 கோடி நிலுவைத் தொகையை தாமதமின்றி வழங்க வேண்டும் என்று மக்களவையில் தேனி தொகுதி அதிமுக உறுப்பினர் ஓ.ரவீந்திரநாத் குமார் வலியுறுத்தினார்.
மக்களவையில் செவ்வாய்க்கிழமை இரவு மத்திய பொது பட்ஜெட் மீதான விவாதத்தில் பங்கேற்று அவர் பேசியதாவது: இந்த பட்ஜெட் பிரதமர் மோடியின் புதிய இந்தியா ஜனநாயகத்துக்கான தொலைநோக்குப் பார்வையைச் செயல்படுத்தும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது. மத்திய பட்ஜெட்டில் கிராமம், ஏழைகள், விவசாயிகள் ஆகியோருக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. 2022-க்குள் விவசாயிகளின் வருவாயை இரட்டிப்பாக்க பட்ஜெட்டில் திட்டமிடப்பட்டுள்ளது . மத்திய அரசு உருவாக்கியுள்ள புதிய ஜல் சக்தி துறை, நீர் வள மேலாண்மையையும், குடிநீர் வழங்கலையும் முழுமையாக நிர்வகிக்கும். உஜ்வாலா, சௌபாக்கியா திட்டங்கள் கிராமப்புற குடும்பங்களில் மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
அதேபோன்று, பட்ஜெட்டில் நரேகா திட்டத்திற்கு ரூ.60 ஆயிரம் கோடி ஒதுக்கீடு, தூய்மை இந்தியா திட்டத்திற்கு ரூ.12 ஆயிரம் கோடி ஒதுக்கீடு, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்திற்கு ரூ.27 ஆயிரம் கோடி ஒதுக்கீடு, பிரதமர் விவசாயிகள் திட்டத்திற்கு ரூ.70 ஆயிரம் கோடி ஒதுக்கீடு என பல்வேறு திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மக்களின் நலனுக்காக மத்திய அரசின் பல்வேறு திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. தேசிய ஜிடிபியில் தமிழகம் முக்கியத்துவமான பங்களிப்பை அளித்து இரண்டாவது இடத்தில் இருந்து வருகிறது. சில நேரங்களில் தமிழகம் கஜா, ஒக்கி போன்ற புயல்களாலும், சுனாமி போன்ற பேரிடர்களாலும், வறட்சியாலும் பாதிக்கப்பட்டு வருகிறது. இதனால், மத்திய அரசிடமிருந்து கூடுதல் நிதியுதவி தேவைப்படுகிறது.
மேலும், மத்திய அரசின் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தும் வகையில், நிலுவையில் உள்ள மத்திய அரசின் நிதியை தமிழகத்திற்கு விரைவில் வழங்க வேண்டும். கடந்த 2 ஆண்டுகளாக மொத்தம் ரூ.11,335 கோடி தமிழகத்திற்கு மத்திய அரசிடமிருந்து வரவேண்டி உள்ளது. இந்த நிலுவைத் தொகையை தாமதமின்றி வழங்கத் தேவையான நடவடிக்கையை மத்திய அரசு எடுக்க வேண்டும். தமிழகத்தில் ஜல்லிக்கட்டு மீண்டும் நடைபெறவும், எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கவும் நடவடிக்கைகள் எடுத்த பிரதமருக்கு நன்றி என்றார் அவர்.