உத்தரப் பிரதேச சுரங்க முறைகேடு தொடர்பாக முன்னாள் அமைச்சர் காயத்ரி பிரஜாபதி, 4 ஐஏஎஸ் அதிகாரிகள் ஆகியோர் மீது 4 புதிய வழக்குகளை சிபிஐ பதிவு செய்தது. மேலும், மாநிலம் முழுவதும் 12 இடங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டதாக அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்தனர்.
முந்தைய சமாஜவாதி கட்சியின் அமைச்சராக இருந்த பிரஜாபதி, முதன்மை செயலர் ஜிவேஷ் நந்தன், சிறப்புச் செயலர் சந்தோஷ்குமார், மாவட்ட நீதிபதிகள் அபய் மற்றும் விவேக் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த 2012 ஆம் ஆண்டு மே 31ஆம் தேதி அப்போதைய உத்தரப் பிரதேச அரசு, மணல் குவாரிக்கு புதிய குத்தகை வழங்குதல் மற்றும் சுரங்கத்தை புதுப்பித்தல் போன்றவற்றை மின்னணு முறையில் ஒப்பந்தம் வழங்க முடிவு செய்தது. இதனை அலாகாபாத் உயர்நீதிமன்றம் 2013 ஜனவரி 29ஆம் தேதி உறுதி செய்தது.
இந்நிலையில், இந்த ஒப்பந்தத்தை சிவசிங் மற்றும் சுக்ராஜ் ஆகியோர் பிரஜாபதியின் செல்வாக்கை பயன்படுத்தி, தங்கள் குத்தகையை புதுப்பித்துக் கொண்டதாக புகார் எழுந்து.
மாநில அரசின் மின்னணு ஒப்பந்தக் கொள்கையை மீறி குத்தகை புதுப்பிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. 4 வழக்குகளிலும் குற்றம்சாட்டியுள்ள நபர்களின் இல்லங்கள் மற்றும் அலுவலகங்களில் சிபிஐ சோதனை நடத்தியது.
ஐஏஎஸ் அதிகாரிகள் அபய், விவேக் ஆகியோர் பணிபுரிந்த இடங்களான புலந்த்சாகர், லக்னெள, ஃபதேபூர், அசாம்கர், அலாகாபாத், நொய்டா, கோரக்பூர், தியோரியா உள்ளிட்ட 12 இடங்களில் சோதனை நடத்தப்பட்டன.
ஐஏஎஸ் அதிகாரி அபய்யின் இல்லம், அலுவலக வளாகத்தில் இருந்து சுமார் 47 லட்சம் ரூபாய் ரொக்கம் மீட்கப்பட்டதாகவும், விவேக்கின் இல்லம், அலுவலகத்தில் இருந்தும் சொத்துக்கள் தொடர்பான சில ஆவணங்களும் கைப்பற்றப்பட்டன என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.