தில்லி தமிழ்க் கல்விக் கழக (டிடிஇஏ) பள்ளிகளில் உலக மக்கள்தொகை தினம் வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.
இதையொட்டி, அந்தந்தப் பள்ளிகளில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உலக மக்கள்தொகை தினம் குறித்து பள்ளி முதல்வர்கள் மாணவர்களுக்கு எடுத்துரைத்தனர். அனைத்துப் பள்ளிகளிலும் மாணவர்களின் உரை இடம் பெற்றது. மேலும், பல்வேறு பதாகைகளை காட்சிப்படுத்தி விழுப்புணர்வு ஏற்படுத்தினர்.
ஜனக்புரி பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மக்கள்தொகைப் பெருக்கத்தால் ஏற்படும் பாதிப்பு குறித்த நாடகம் இடம் பெற்றது. ராமகிருஷ்ணாபுரம் பள்ளியில் வினாடி - வினா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், டிடிஇஏ செயலர் ஆர்.ராஜு பங்கேற்றுப் பேசினார். மக்கள்தொகைப் பெருக்கத்துக்கு ஏற்ப உற்பத்தி இல்லையென்றால், பாதிப்புகள் நிறைய இருக்கும் என்பதையும், நீர், மின்சாரம் ஆகியவற்றை சேமிப்பதன் அவசியம் குறித்தும் அவர் எடுத்துரைத்தார். பள்ளி முதல்வர் சித்ரா வாசகம் வரவேற்றுப் பேசினார்.